இந்தியாவில் என்னைவிட தேசபக்தி மிகுந்தவன் யாரும் இருக்க முடியாது: ஷாருக்கான்
மும்பை: இந்தியாவில் தன்னை விட தேசபக்தி மிகுந்தவர் யாரும் இருக்க முடியாது என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். நான் இந்த நாட்டை சேர்ந்தவன் தான், எனக்கு தேசபக்தி உள்ளது என்று என்னை சொல்ல வைத்ததை நினைத்தால் சில சமயம் அழ வேண்டும் போல் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாதது மிகப்பெரிய பிரச்சனை. அது கவலை அளிப்பதாக உள்ளது என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார். இதையடுத்து பல அரசியல் கட்சிகளும், சமூக வலைதளங்களில் மக்களும் ஷாருக்கானை கண்டித்து கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் தற்போது கூறியிருப்பதாவது,
அழுகை
நான் இந்த நாட்டை சேர்ந்தவன் தான், எனக்கு தேசபக்தி உள்ளது என்று என்னை சொல்ல வைத்ததை நினைத்தால் சில நேரம் எனக்கு கவலையாக இருக்கும், சில சமயம் அழ வேண்டும் போல் இருக்கும்.
இளைஞர்கள்
சகிப்புத்தன்மையோடு இருங்கள், சந்தோஷமாக இருங்கள், கடினமாக உழையுங்கள், அவ்வாறு செய்து நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்று நான் இளைய தலைமுறையிடம் தெரிவிப்பேன்.
தேசபக்தி
நான் கடைசி முறையாக மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டில் என்னை விட தேசபக்தி உள்ளவன் யாரும் கிடையாது. இந்த உலகின் மிகவும் பெருமைமிக்க இந்தியன் நான். மதம், ஜாதி, நிறம் உள்ளிட்டவற்றில் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொள்ளாதீர்கள் என்று தான் இளைய தலைமுறைக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.
தந்தை
என் தந்தை தனது இளம் வயதில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர். இந்த சிறந்த நாட்டில் இருந்து அனைத்தையும் பெற்ற நான் எப்படி நாட்டை பற்றி புகார் தெரிவிப்பேன். நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன்.
அழகான நாடு
உலகின் சிறந்த நாட்டில் வாழும் நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நாம் உலகின் மிகவும் அழகான, பாதுகாப்பான நாடுகளில் ஒன்றில் வசித்து வருகிறோம். அப்படி இருக்கையில் சிறு சிறு விஷயங்களில் முடங்கிவிடக் கூடாது.
குட்டி இந்தியா
என் குடும்பமே ஒரு குட்டி இந்தியா தான். என் மனைவி கௌரி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், என் 3 குழந்தைகள் மூன்று மதங்களை பின்பற்றுகிறார்கள். அப்படி இருக்கையில் என் நாட்டை பற்றி நான் எப்படி குறைவாக நினைக்க முடியும்?
சம்பளம்
நான் விளம்பரங்களுக்கு, மேடை நிகழ்ச்சிகளுக்கு, நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பணம் வாங்குகிறேன். என் படம் நன்கு ஓடினால் நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று தான் தயாரிப்பாளர்களிடம் கூறுகிறேன். படத்தில் நடிப்பதை வியாபாரமாக வைத்துக்கொள்ளவில்லை.