ஜியோ விளம்பரத்தில் மோடி படத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய அரசு மறுப்பு
ஜியோ விளம்பரத்தில் மோடி படத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தைப் பயன்படுத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஜியோ என்ற பெயரில் புதிய தொலைத்தொடர்பு சேவையை அறிமுகம் செய்தது. அதன்படி ஜியோ பயனர்கள் கட்டணம் எதுவும் இல்லாமல் அழைப்பு, இண்டர்நெட் மற்றும் வீடியோ போன்ற வசதிகளை மார்ச் 31, 2017 வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஜியோ சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முகேஷ் அம்பானி நேற்று அறிவித்தார். இதன் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் எம்.பி நீரஜ் சேகர், மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், 'ஜியோவின் எலக்ட்ரானிக் ஊடகங்களில் பிரதமர் மோடியின் படம் வெளியிடுவதற்கு பிரதமர் அலுலகம் அனுமதி எதுவும் வழங்கவில்லை.
தற்போது இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசு விதிகளின்படி, அரசு விளம்பரங்களில் மட்டுமே பிரதமர் படம் இடம் பெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதியில்லை'' என்று குறிப்பிட்டார்.