காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
திரினமுல் காங்கிரஸ் கட்சியின் சுகதா ராய், லோக்சபாவின் கேள்வி நேரத்தின்போது எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்த கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு எழுத்துப்பூர்வ பதில் அளித்திருந்தார். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கிவிட்டு ஜம்மு காஷ்மீருக்கு அளித்துள்ள சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் திட்டம் உள்ளதா என்று சுகதா ராய் கேட்டிருந்தார்.
இதற்கான பதிலாக "இல்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவோம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உத்தம்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான, ஜிதேந்திர சிங், இந்த சட்டப்பிரிவை நீக்குவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.
லோக்சபாவில் உள்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதிலை வைத்து பார்க்கும்போது, தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பிறகும், பாஜக கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து திடீரென அக்கட்சி மாறியிருப்பது தெளிவாகிறது.