'எவனா இருந்தாலும் வெட்டுவேன்' பேச்சு... பாபா ராம்தேவுக்கு ஜாமீனில் வர முடியாத வாரண்ட்
தலையை வெட்டுவேன் என்று கூறிய யோக கலை குரு பாபா ராம்தேவுக்கு பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட்டை ரோத்தக் நீதிமன்றம் பிறப்பித்தது.
ரோத்தக்: பாரத் மாதா கீ ஜே என்று முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் முழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். அதே கருத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பும் வலியுறுத்தியது.

இந்நிலையில் பாரத தாயை வணங்குவோம் என்ற அர்த்தம் கொண்ட பாரத் மாதா கீ ஜேவை முழங்குவதற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது கடவுளை தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பாபா ராம்தேவ், பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்தை முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா ஹரியாணா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கானது இன்று கூடுதல் குற்றவியல் தலைமை நீதிபதி ஹரீஷ் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகுமாறு பாபா ராம்தேவுக்கு உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் பாபா ராம்தேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications