மும்பை ஐ.ஐ.டி. கேண்டீனில் அசைவ உணவுகளுக்கு தடை! - மாணவர்கள் எதிர்ப்பு
மும்பை ஐஐடியில் உள்ள உணவகத்தில் அசைவ உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மும்பை: மும்பை ஐஐடியில் உள்ள ஓர் உணவகத்தில் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்குப் பெரும்பான்மையான மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் பொவாய் என்னுமிடத்தில் ஐஐடி உள்ளது. இதில் சிவில் எஞ்சினியரிங்துறையில் உள்ள ஓர் உணவு விடுதியில் மீன், இறைச்சி ஆகிய அசைவ உணவுவகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நூற்றுக்குத் தொண்ணூறு மாணவர்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கும்போது 10 சதவிகிதத்தினர் உணவுப் பழக்கத்தை மற்றவர்கள் மீது திணிப்பதாக ஐஐடி நிர்வாகம் மீது மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மும்பையில் உள்ள ஐஐடியில் சைவம், அசைவ உணவுகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. சைவ உணவுகளை எவர்சில்வர் தட்டிலும், அசைவ உணவுகளை பிளாஸ்டிக் ட்ரே தட்டிலும் சாப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சில ஆண்டுகளாகவே ஐஐடியில் வழக்கத்தில் உள்ளது.
இந்த நிலையில் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் எவர்சில்வர் தட்டுக்களில் சாப்பிடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உணவு விடுதியை நிர்வகிக்கும் மாணவர் அமைப்பு கடந்த மாதம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் பிளாஸ்டிக் தட்டுக்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். சைவ மாணவர்களின் தட்டுக்களை உபயோகிப்பதால் அவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில மாணவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் எவர்சில்வர் தட்டுக்களில் அசைவ உணவுகளை வைத்து சாப்பிட்டதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சிவில் எஞ்சினியரிங்துறையில் உள்ள ஓர் உணவு விடுதியில் மீன், இறைச்சி ஆகிய அசைவ உணவுவகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.