விடாமல் விரட்டி பிரதமரை சந்தித்த பன்னீர்செல்வம்... அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை!
டெல்லி : தமிழக அரசியலில் நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவின் மூன்றாவது அணியான டிடிவி. தினகரன் அணி மதுரை மாவட்டம் மேலூரில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இதில் அறிவிக்க உள்ளதாக தினகரன் கூறியுள்ளார்.
இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி முதல்வர் பழனிசாமி அணி தினகரன் நியமனத்துக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது. அதிமுகவில் சசிகலா நியமனம் செல்லாது என்பதற்கு தங்கள் தரப்பிலான கூடுதல் மனுவாக இந்த தீர்மானத்தை ஓபிஎஸ் அணி தாக்கல் செய்தது.
அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இந்நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவிற்காக வெள்ளிக்கிழமை டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே அணிகள் இணைப்பு குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஓ.பிஎஸ்க்கு நேரம் கிடையாது
ஆனால் முதல்வர் பழனிச்சாமியை மட்டுமே சந்தித்த பிரதமர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கவில்லை. இதனால் சற்று தயக்கமடைந்த பன்னீர்செல்வம் ஷீரடி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இழுத்தடிப்புக்கு பின்னர் சந்திப்பு
இதனிடையே மூன்று நாள் காத்திருப்பிற்குப் பிறகு இன்று ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அணிகள் இணைப்பில் இருக்கும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

முட்டுக்கட்டைகள் ஏன்?
சசிகலாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதே தங்கள் அணியின் தர்மயுத்தம் என்பதால் அதை நிச்சயம் எதிர்ப்பார்ப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது. மேலும் அணிகள் இணைப்பிற்கு முதல்வர் பழனிச்சாமி அணி சார்பில் ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது

அரசு குறித்து ஆலோசனை
பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின் சாராம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியிருந்ததாவது : பிரதமரிடம் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறினேன். அனைத்து அம்சங்கள் குறித்து பிரதமருடன் விரிவாகப் பேசியுள்ளேன். அணிகள் இணைப்பு குறித்த வியூகங்களை உங்களது கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

நன்மை தரும் முடிவு
தமிழக மக்கள், அதிமுகவினரின் எண்ணங்கள், கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் முடிவெடுப்போம். எந்த முடிவெடுத்தால் மக்களுக்க நன்மை தருமோ அந்த முடிவை நாங்கள் எடுப்போம், என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications