"எனக்கு கல்யாணம்னு எனக்கே தெரியாது!" சொந்த திருமணத்திற்கு வராத ஒடிசா எம்எல்ஏ! கமெடியின் உச்சம்
புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் அவரது சொந்த திருமணத்திற்கே செல்லாத நிகழ்வு அரங்கேறி உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள திர்தோல் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பிஜு ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பிஷ்ணு சரண் தாஸ். கடந்த 2019 தேர்தலில் அவர் பாஜக வேட்பாளரை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார்.
இந்நிலையில் அவர் தனது சொந்த திருமணத்திற்கே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா
கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள ரெஜிஸ்டர் ஆபீஸில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், அன்றைய தினம் பிஷ்ணு சரண் தாஸ் ரெஜிஸ்டர் ஆபீஸ் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் ஒருவர் ஜகத்சிங்பூர் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு
அதன்படி ஐபிசி 420, 509 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சரண் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளதாகவும் எம்எல்ஏ தரப்பில் இது குறித்துக் கேட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏமாற்றினார்
இருவரும் கடந்த மே 17ஆம் தேதி ரெஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்திற்காகப் பதிவு செய்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை திருமண சடங்குகளுக்காக அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்துள்ளார். இருப்பினும், அன்றைய தினம் எம்எல்ஏ சரண் தாஸ் வரவில்லை என்றே அப்பெண் எஃப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளார்.

எம்எல்ஏ
அதேநேரம் 30 வயதான எம்எல்ஏ தாஸ், அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இருந்ததை மறுக்கவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், "திருமணப் பதிவுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ளன. அதனால் தான் நான் செல்லவில்லை. அன்றைய தினம் திருணத்திற்காக வருமாறு அவளோ இல்லை அவளுக்குத் தொடர்புடையவர்களோ என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இதனால் அவள் அங்கு வந்ததும் தெரியாது" என்றார்.

பெண் புகார்
சரண் தாஸும் தானும் மூன்று வருடங்களுக்கு மேலாகக் காதலித்து வருவதாகவும் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தன்னை மிரட்டுவதாகவும், எம்எல்ஏவும் தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றும் அப்பெண் தெரிவித்தார். மேலும், தனது தொலைப்பேசி அழைப்புகளுக்கும் கூட அவர் பதிலளிக்கவில்லை என்று அபெண குற்றஞ்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications