தேசிய அளவிலான அரசு இணைய சேவை நிர்வாக திட்டம்.. முதலிடம் பிடித்து அசத்திய ஒடிசா!
புவனேஷ்வர்: ஒடிசா அரசின் இணைய சேவை திட்டம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால், தேசிய அளவிலான அரசு இணைய சேவை நிர்வாக திட்டத்தின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான அரசு இணைய சேவை நிர்வாக திட்டத்தின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மற்ற மாநிலங்களை விடவும் அதிக மதிபெண்கள் பெற்று ஒடிசா அரசு நிர்வாகம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மொத்தமாக 98 மதிப்பெண்கள் பெற்று ஒடிசா மாநிலம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், 86 மதிப்பெண்களுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் வளர்ந்த மாநிலங்கள் என்று கூறப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
அளவுகோல் என்ன?
இதுகுறித்து ஒடிசா மாநிலத்தின் தொழிற்நுட்ப அமைச்சக செயலாளர் மனோஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், தேசிய அளவிலான இணைய சேவை நிர்வாக திட்டத்தின் கணக்கெடுப்பு 4 அளவுகோலாக பிரிக்கப்பட்டுளது. அதில் முதலாவது அளவுகோல் இணைய சேவையை அணுகுதல், இரண்டாவது தேடுவதற்கான உள்ளடக்கம் கிடைப்பது, மூன்றாவது எளிமையான பயன்பாடு, நான்காவது பாதுகாப்பு.என்று தெரிவித்தார்.
ஒடிசா அரசின் சிறப்பு
இதில் ஒடிசா அரசு 4 அளவுகோல்களிலும் சிறப்பாக செயல்பட்டு 98 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து பேசிய மனோஜ் குமார் மிஸ்ரா, எங்கள் இணைய சேவை திட்டம், மக்கள் மத்தியில் 100 சதவிகிதம் பயன்படுத்த எளிமையானது. ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ள அரசின் இணைய சேவை நிர்வாக திட்டம், பயன்படுத்துவதற்கு 50 சதவிகிதம் மட்டுமே எளிமையாக உள்ளது.
சான்றிதழ் பெறுவது எப்படி?
முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு, ஒடிசாவில் 5டி மாடல் என்ற புதிய திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு முன்னெடுத்தது. தற்போது அதற்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகத்திற்கு நேரடியாக வராமலேயே, தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியும். முக்கியமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட எதற்காகவும் அரசு அலுவலகம் வர தேவையில்லை. இணையம் மூலம் அத்தனை சான்றிதழ்களையும் பெறும் வகையில் அரசு நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஆன்லைன் மூலம் எளிதாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
5டி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு துறை இப்போது தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் மக்களின் கருத்துக்களும், அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. அதனால் பிரச்னைகள் பெரிதாக ஏற்படுவதில்லை. அதேபோல் ஒவ்வொரு அரசு சேவைக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சம்மந்தப்பட்ட நபருக்கு, அரசின் சேவை வழங்கப்படவில்லை என்றால், அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மாநிலம் தொடர்பாக அனைத்து தரவுகளையும் அரசிடம் உள்ளது. அரசு நலத் திட்டங்களின் குறித்த அனைத்துத் தரவுகளும் மாநிலச் செயலகத்துடன் இணைத்து தொழிற்நுட்பத்தின் உதவியுடன் சேமிக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல் பல்வேறு சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்பு மையங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.