கோவிட் தடுப்பு மருந்துகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியது ஒடிஸா அரசு!
புவனேஸ்வரம்: கொரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாக்கும் இடங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை ஒடிஸா அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்து வரும் 13 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதற்காக அந்த மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இந்த நிலையில் தடுப்பு மருந்துகளை பாதுகாக்கும் இடத்திலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு வரும் போதும் ஊசி செலுத்தும் இடங்களிலும் என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஒடிஸா மாநிலத்துக்கான கூடுதல் தலைமை செயலாளர் பிகே மோஹபத்ரா அனைத்து ஆட்சியர்களுக்கும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை விடுத்துள்ளார்.
அதில் சட்டவிரோதமாக தடுப்பு மருந்து சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாங்குதல் அல்லது விற்றல் ஆகியவை தண்டனைக்குரிய சட்டம் ஆகும். அவ்வாறு ஏதேனும் நடந்தால் உடனடியாக மருந்து கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளிக்க வேண்டும்.
கோவிட் 19 தடுப்பு மருந்துகள் விநியோகம் முழுவதும் கோ வின் எனும் போர்ட்டல் மூலம் டிராக் செய்யப்படும். கோவிட் தடுப்பு மருந்தின் தகவல்களான பெயர், பேட்ச், தயாரிக்கப்பட்ட தேதி ஆகியவை டேட்டாபேஸாக பாதுகாக்கப்படும்.
காலியான அனைத்து தடுப்பு மருந்துகளும் மீண்டும் அரசிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும். ஆரம்ப கட்டம் என்பதால் குறைந்த அளவிலான தடுப்பு மருந்துகளே மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.