பட்ஜெட் 2018 : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக்கு விலக்கு கோரும் பெட்ரோலியத் துறை!
நடப்பு பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
Recommended Video
டெல்லி : நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் 2018 - 19ம் நிதியாண்டிற்கான நிதிஅறிவிப்பில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நிதித்துறை அமைச்சம் தான் இது குறித்து முடிவு எடுக்கும் என்பதால் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2019ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆட்சிக் காலம் முடிவடையும் நிலையில், அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி சில மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் அதிக உச்சத்தை எட்டி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆசிய நாடுகளிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் மீது விதிக்கப்படம் 40 முதல் 50 சதவீதம் வரையிலான வரி.
இறுதி முடிவு நிதித்துறையிடம்
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை72.23 ரூபாயாகவும், டீசல் ரூ. 63.01 ரூபாயாகவும் உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம். ஆனால் இறுதி முடிவு நிதித்துறை அமைச்சகத்தின் கையில் தான் இருக்கிறது.
நிதிச்சுமையால் சந்தேகம் தான்
பட்ஜெட்டில் கலால் வரி விலக்கு அறிவிப்பு வெளியாகுமா என்பது சந்தேகமான நிலையிலேயே இருக்கிறது. ஏனெனில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததால் ஏற்கனவே நிதிச் சுமையால் மிகப்பெரிய சவாலை சந்தித்து வரும் நிலையில், வரி வருவாயை குறைக்கும் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
வரி வருவாய் அதிகம்
2016-17ம் ஆண்டில் பெட்ரோலியத் துறை 5.2 ட்ரில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியது. இது மொத்த வருவாயில் 3ல் ஒரு பங்கு. 2014 நவம்பர் முதல் ஜனவரி 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 9 முறை கலால் வரியை உற்ரத்தியுள்ளது. இதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் லிட்டருக்கு 2 ரூபாய் கலால் வரியை குறைத்தது.
ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரலாம்
ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல், ஜெட் எரிவாயு மற்றும இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றையும் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் வரிக்கான லாபத்தை பெற முடியும் என்பதால் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சம் கூறியுள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களை கொண்டு வருவதன் மூலம் சில்லறை விலையில் இவற்றின் விலை குறையும் என்றும் ஜிஎஸ்டியில் 28 சதவீத வரியே விதிக்கப்பட்டாலும் விலை உயர்வு மக்களை பாதிக்காது என்று பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.