பஞ்சாப்பில் பயங்கரவாதிகள் தாக்குதல் - எஸ்.பி. உட்பட 8 பேர் பலி; 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!!
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் எல்லை தாண்டி ஊடுருவிய பயங்கரவாதிகள் இன்று கொடூர தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே 12 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இம்மோதலில் காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 8 பேர் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகர் காவல் நிலையம் மற்றும் பேருந்து ஒன்றின் மீது ராணுவ உடையில் இருந்த சில தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இன்று அதிகாலை 5 மணியளவில் இத்தாக்குதல் தொடங்கியது.
இந்த தாக்குதலால் குர்தாஸ்பூரில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிரவாதிகள் பதுங்கிய கட்டிடத்தை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தினர்.
இருதரப்பினரிடையே மாலை 5 மணிவரை சுமார் 12 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்த மோதலில் குர்தாஸ்பூர் எஸ்.பி. உட்பட 8 பேர் பலியாகினர். மொத்தம் 5 போலீசாரும் 3 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலை நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.
இதனிடையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஞ்சாப் முதல்வருடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து விவரம் பெற்றார். மேலும் பஞ்சாபில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
இத்தாக்குதலால் குர்தாஸ்பூரில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.