மேக் இன் இந்தியா திட்டம் தொழில்நுட்பத்துடன் கைகோர்க்க வேண்டும் - விஞ்ஞானி சரஸ்வத்
பெங்களூர்: பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய மேக் இன் இந்தியா திட்டம் மூலம் விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று நித்தி அயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் ஏலஹன்காவில் விமான கண்காட்சி நாளை துவங்குகிறது. கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை ஏலஹன்கா வருகிறார். இந்நிலையில் கண்காட்சியில் பங்கேற்க நித்தி அயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத் இன்று பெங்களூர் வந்துள்ளார்.
அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
மேக் இன் இந்தியா திட்டம் தொழில்நுட்பத்துடன் கைகோர்க்க வேண்டும். நாம் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளோம். தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளதால் நல்ல பார்ட்னர்களுடன் சேர்ந்து மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்த வேண்டும். விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறைக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா திட்டத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். இத்திட்டத்தால் இந்த துறைகளில் பெரிய மாற்றம் ஏற்படும்.
இந்தியா முன்னேறிய நாடாக தொழில்நுட்பம் தான் முக்கியம். தேஜாஸ் எம்கே-2 விமானத்தை தேஜாஸ் எம்கே-1 உடன் சேர்த்து இந்தியா உருவாக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் உலகத் தரத்துடன் இருந்தாலும் கனமாக உள்ளன. நம் ஏவுகணைகள் கனம் குறைவானதாக இருக்க வேண்டும் என்றார்.