டெல்லியில் ஆட்சி அமைக்க கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பாஜக?
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பதவியேற்ற 48 நாட்களில் ஊழலுக்கு எதிரான ஜனலோக் பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் 32 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போது ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது. இந்நிலையில் பாஜக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சியை விட்டுவிட்டு வந்து பாஜக ஆட்சி அமைக்க உதவுமாறு கேட்டுள்ளதாக முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த எம்.எல்.ஏ. ராஜேஷ் கார்க் அந்த நாளிதழிடம் கூறுகையில்,
எங்களை பாஜக பல முறை அணுகியுள்ளது. பாஜகவுடன் தனக்கு தொடர்புள்ளது என்று கூறிக் கொண்டு ஒருவர் என்னை திங்கட்கிழமை சந்தித்தார். மறுதேர்தல் நடத்தினால் காங்கிரஸோ, ஆம் ஆத்மி கட்சியோ ஆட்சிக்கு வராது என்றார் அவர். நான் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்றார். பணம் வேண்டும் என்றால் பாஜக தலைமையிடம் பேசி வாங்கித் தருவதாக அவர் கூறினார்.
பாஜக ஆட்கள் தங்களை அணுகி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாகக் கூறியதாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களான ராஜு திங்கன் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டெல்லி பாஜக தலைவர் ஹரிஷ் குரானா கூறுகையில்,
ஒரு கட்சி எம்.எல்.ஏ. மற்றொரு கட்சி எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசுவது அரசியலில் சகஜம். ஆனால் அதை வைத்துக் கொண்டு நாங்கள் அவர்களின் கட்சியை உடைக்க பணம் தர முன்வந்ததாக கூறுவது சரி அல்ல என்றார்.
ஆம் ஆத்மி கட்சி தலைமை மீது அக்கட்சியை சேர்ந்த பலர் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 30 நாட்களில் மட்டும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஷாஜியா இல்மி, கேப்டன் கோபிநாத் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.