பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு... எதற்கு தெரியுமா?
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள், தேவைகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து எடுத்துக் கூறினோம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம் என்றும பன்னீர்செல்வம் கூறினார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். மைத்ரேயன் எம்பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து மீண்டும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இரு அணி தலைவர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் அணிக்கு பெரிய அளவில் எம்எல்ஏ, எம்பிக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் அணியில் 12 எம்பிக்கள் மற்றும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதேசமயம், எடப்பாடி அணியில் 123 எம்எல்ஏக்கள் மற்றும் 35 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவர் வரிசையாக டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய அரசு திடீரென எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு அளிக்க தொடங்கியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் கடைக்கண் பார்வை எடப்பாடி பக்கம் திரும்பி வருவது ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியுடன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் ஆதரவு தருவார்கள் என்ற தகவல் வெளியானது. பிரதமர் உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்றார்.
தமிழக மக்களுக்கு இப்போதைக்கு என்ன தேவையோ அதனை அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக கோரிக்கை வைத்தோம் என்றார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறினோம் என்றும் அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள், தேவைகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து எடுத்துக் கூறினோம். தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் கடனில் சிக்கித் தவித்து வருகின்றனர். தேசிய வங்கிக்களில் விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம் என்றும் கூறினார்.
ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இப்போதோ அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் தலைவராக நேரில் சந்தித்து பேசியுள்ளார்.