குஜராத் கலவரத்திற்கு மோடி மன்னிப்பு கேட்காதது ஏமாற்றமே: ப.சிதம்பரம்
டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு மோடி மன்னிப்பு கேட்க விரும்பாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
குஜராத் கலவரத்திற்கு மோடி மன்னிப்பு கேட்க விரும்பாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

2002ல் நடந்த கலவரத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று சட்டரீதியாக குற்றச்சாட்டு, மற்றொன்று தார்மீக மற்றும் அரசியல் பொறுப்புத்தன்மை. இதில் முதலாவது அம்சம் நீதிமன்றத்தில் உள்ளது. இரண்டாவது அம்சமான தார்மீக மற்றும் அரசியல் பொறுப்புத்தன்மை மாநில முதல்வரை சார்ந்தது.
கலவரம் நடந்தபோது மோடிதான் முதல்வராக இருந்தார். கடந்த 12 ஆண்டுகளாக அவர் இதற்கு பொறுப்பேற்க மறுக்கிறார். மன்னிப்பு கேட்கிறேன் என்ற வார்த்தையை கூட மோடி கூற விரும்பாதது ஏமாற்றமளிக்கிறது.
நாடு முழுவதும் பெரும்பான்மை வாதத்தை பிரச்சாரம் செய்து வரும் மோடியின் போக்கிற்கு காங்கிரஸ் சரியான பதிலடியை கொடுக்கும். பெரும்பான்மை வாதம் என்பது ஆட்சி செய்யும் வழியல்ல. அது ஜனநாயக ஆட்சிக்கு எதிரானது.
அவருடைய பிரச்சார உரையை கவனமாக படித்துப் பார்த்தால் பெரும்பான்மைவாதத்தின் போக்கு தெரியும். அவருடைய பேச்சுக்கள் முழுவதையும் நான் படித்துப் பார்க்கவில்லை. செய்தித்தாள்களில் வந்ததை மட்டும் படித்தேன்.
மோடி தனது பேச்சில் நான், எனது, என்னுடைய என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறார். நான் இதுவரை பார்த்தவரையில் மோடி பெரும்பான்மைவாதத்தையும், நான், எனது, என்னுடைய என்ற தத்துவத்தையும் மட்டுமே பரப்புகிறார்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டை, ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல யாராலும் அழிக்க முடியாது. ஒரு கட்சி அல்லது கட்சித்தலைவரால் அழிக்கப்படும் அளவுக்கு இந்திய ஒருமைப்பாடு பலவீனமானது அல்ல. மோடிக்கு பல விவகாரங்களை பற்றி தெரியாததால் அதுகுறித்து அவர் பேசுவதே இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் பேசியது இல்லை.
அவரை சில கேள்விகள் கேட்கிறேன். நிதிப் பற்றாக்குறை பற்றி அவரது கருத்து என்ன? நிதிக் கொள்கை குறித்து அவரது நிலை என்ன? வருவாய் பற்றாக்குறை பற்றி அவருக்கு என்ன தெரியும்? இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் உள்ளன. அதற்கெல்லாம் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications