தெலுங்கானா மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம்! இந்தியாவின் 29வது மாநிலமானது!!
டெல்லி: கடும் அமளிக்கு இடையே ராஜ்யசபாவிலும் தெலுங்கானா மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நாட்டின் 29வது மாநிலமாக உருவானது தெலுங்கானா.
ராஜ்யசபா நேற்று காலை கூடியதும் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அவரவர் மாநில பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ராஜிவ் வழக்கில் ஏழு பேரை விடுவிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
ஆந்திராவை பிரிப்பதற்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி எம்.பிக்கள் பதாகைகளை பிடித்து முழக்கமிட்டனர். இந்த அமளிக்கிடையே தெலுங்கானா மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார்.
ஷிண்டேவை பாதுகாத்த தெலுங்கானா எம்.பிக்கள்
அப்போது, அவரைச் சுற்றிலும் தெலுங்கானா ஆதரவு எம்.பி.க்கள் மனித வளையம் போல் நின்று கொண்டனர். அவர்களை தெலுங்கானா எதிர்ப்பு எம்.பி.க்கள் தாக்க முற்பட்டனர்.
5 முறை ஒத்தி வைப்பு
அமளி காரணமாக, பிற்பகல் 2 மணியில் இருந்து 4.30 மணிக்குள் 5 முறை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நடந்த விவாதத்தின்போது, தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
திமுக கடும் எதிர்ப்பு
மசோதா மீது பேசிய கனிமொழி, தெலுங்கானா மசோதா, இந்தியாவின் கூட்டாட்சி முறை பற்றிய கவலையை எழுப்புகிறது. ஆந்திராவை பிரிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஆகவே, வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார்.
அமைச்சர் சிரஞ்சீவி கடும் எதிர்ப்பு
பிரதமர் மன்மோகன்சிங் திடீரென சபைக்கு வந்தார். அவர் முன்னிலையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி, தெலுங்கானா தனிமாநிலம் உருவாக்குவதற்கு எதிராக பேசினார். கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவது தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
பாஜக புது கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், சீமாந்திரா பகுதிக்கு ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு நிதிஉதவி அறிவிக்க வேண்டும்' என்றார். பிரதமர் மன்மோகன்சிங் குறுக்கிட்டு பேச எழுந்தபோது, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மசோதாவை கிழித்து வீசு என்று கூச்சலிட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், மன்மோகன்சிங் முன்பு காகிதங்களை கிழித்து வீசினர்.
மன்மோகன்சிங் உறுதி
மன்மோகன்சிங் பேசுகையில், சீமாந்திரா பகுதியின் பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு நிதிஉதவி திட்டம் அறிவிக்கப்படும். வரிச்சலுகை அளிக்கப்படும். சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் 6 அம்ச வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். போலாவரம் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சீமாந்திராவுக்கு 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்றார்.
குரல் வாக்கெடுப்பு..
இதையடுத்து தெலுங்கானா மசோதாவை திருத்தம் இன்றி ஆதரிக்க பாரதிய ஜனதா முன்வந்தது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ், பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகியவை எதிர்த்தன.
நிறைவேறியது
கடுமையான கூச்சல்-குழப்பத்துக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் தெலுங்கானா மசோதா இரவு 8.30 மணியளவில் நிறைவேறியது. திருத்தம் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டதால் மீண்டும் லோக்சபாவுக்கு அனுப்பாமல் ஜனாதிபதி ஒப்புதலுக்கு நேரிடையாக அனுப்பி விடலாம். இதனால் நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உதயம் ஆனது