கவுண்டமணி பாணியில் கண்டக்டராக நடித்து பயணிகளிடம் பணம் அபேஸ் செய்த நபர்!
பெங்களூர்: உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி செய்வதுபோல, கண்டக்டர் என்று ஏமாற்றி பயணிகளிடம் பணம் வசூலித்த பலே நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
டுபாக்கூர் கண்டக்டர்
பெங்களூர் கோரமங்களாவை சேர்ந்தவர் மம்தா விஜயகுமார். இவரும் அவரது குடும்பத்தார் மூவரும் பெங்களூரில் இருந்து சித்தூர் செல்வதற்காக கர்நாடக அரசு பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். பெங்களூர் மத்திய பேருந்து நிலையமான மெஜஸ்டிக்கில் பஸ் நின்றுகொண்டிருந்தது. அப்போது காக்கி சட்டை, பேண்ட் அணிந்த நபர் கையில் டிக்கெட் மிஷினுடன் பஸ்சுக்குள் ஏறினார்.
நாலு டிக்கெட் போடுங்க
"டிக்கெட்.. டிக்கெட்" என்று கேட்டபடி மம்தாவிடம் வந்தார். அவரும் "சித்தூருக்கு நாலு டிக்கெட் தாங்க.." என கேட்டுள்ளார். ஒரு நபருக்கான டிக்கெட் கட்டணம் ரூ.140 என்று கூறி 'கண்டக்டர்' கூறியுள்ளார். இதையடுத்து நான்கு டிக்கெட் தருமாறு கூறிய மம்தா ரூ.600 எடுத்துக் கொடுத்துள்ளார்.
நான் அங்கபோகலையே..
மிஷினில் இருந்து டிக்கெட் பிரிண்ட் ஆகியதும் அதை வாங்கிய மம்தா அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அதில் பெங்களூர்-சித்தூர் என்பதற்கு பதிலாக, வடகர்நாடக நகரங்களான ஹூப்ளி-தாவணகெரே என்று அச்சிடப்பட்டிருந்தது. எனவே சந்தேகமடைந்த மம்தா, "சித்தூருக்கு டிக்கெட் கேட்டால், தாவணகெரேக்கு தருகிறீர்களே" என்று கேட்டுள்ளார்.
கிரேட் எஸ்கேப்
சுதாரித்துக்கொண்ட 'கண்டக்டரும்', "அப்படியா மேடம்.. தொழில்நுட்ப கோளாறால் இதுபோல ஆகிவிட்டதுபோல.. இப்போது சரி செய்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு பஸ்சில் இருந்து இறங்கிவிட்டார். ஆனால் அவர் திரும்ப வரவில்லை.
ஏற்கனவே எடுத்துவிட்டேன்
இன்னொரு கண்டக்டர் வந்து "எந்த ஊருக்கு போகனும்" என்று மம்தாவிடம் கேட்டதும், "நான் ஏற்கனவே டிக்கெட் எடுத்துவிட்டேனே" என்று கூறியுள்ளார். "இந்த பஸ்சுக்கு நான் மட்டும்தான் நடத்துனர். இப்போதுதான் பஸ்சுக்குள் ஏறுகிறேன், என்ன விளையாடுகிறீர்களா" என்று கண்டர் கேட்டுள்ளார். ஏற்கனவே எடுத்த டிக்கெட்டை நடத்துனரிடம் மம்தா காண்பித்துள்ளார். இதில் ஏதோ மோசடி உள்ளது என்று கண்டக்டர் தெரிவித்துள்ளார்.
திருட்டு மிஷின்
இதையடுத்து பஸ் நிலையத்திலுள்ள அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மம்தா இதுபற்றி புகார் அளித்தார். அப்போதுதான், வந்தது போலி கண்டக்டர் என்று தெரிந்துள்ளது. வடகர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இரு டிக்கெட் மிஷின்கள் பெங்களூர் பஸ் நிலையத்தில் சமீபத்தில் காணாமல் போயுள்ளன. இதை யாரோ எடுத்து வைத்துக்கொண்டுதான் டிக்கெட் வினியோகம் செய்து வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசில் புகார் பதிவாகியுள்ளது. டிக்கெட் வழங்கும் மிஷின்களை இயக்க பழக்கம் தேவை என்பதால், போக்குவரத்து கழகத்தில் யாரோதான் இதுபோன்ற மோசடியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கவுண்டர் பாணியில்..
உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் போகும் பஸ்சில் நடத்துனர் என்று பொய் சொல்லி கவுண்டமணி பயணிகளை ஏமாற்றுவதைப்போல காட்சி இருக்கும். அதேபோல பெங்களூரிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒருவேளை திருடன், கவுண்டர் ரசிகனோ என்னமோ தெரியவில்லை. மம்தா மட்டும் சுதாரித்துக் கொண்டு டிக்கெட்டை பார்த்து சந்தேகம் எழுப்பாவிட்டால், பஸ்சில் இருந்த அனைவருக்கும் மொட்டை போட்டிருப்பார் அந்த பலே ஆசாமி.