'படேல்' கிளர்ச்சி... குஜராத் பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்க... ஆளுநரிடம் காங்கிரஸ் மனு!
அகமதாபாத்: குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்து 10 பேர் பலியாகினர். இதனால் பதற்றம் நீடிக்கும் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தில் கடந்த 2 மாத காலமாக படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக அகதமாபாத்தில் 10 லட்சம் பேர் திரண்ட மாபெரும் பேரணியை படேல் சமூகம் நடத்தியது. இந்த போராட்டத்துக்கு தலைமையேற்ற ஹர்திக் படேல் திடீரென கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குஜராத் முழுவதும் வன்முறை வெடித்தது. 200க்கும் அதிகமாக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; அனைத்து போக்குவரத்தும் முடங்கியது; மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் நிகழ்ந்த வன்முறைகளில் 10 பேர் பலியாகினர்.
இவ்விவகாரம் அம்மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. இதனிடையே குஜராத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அம்மாநில ஆளுநர் ஓ.பி. கோஹ்லியை நேற்று காங்கிரஸ் தலைவர்கள் சங்கர்சிங் வகேலா, பரத்சின்க் சோலங்கி ஆகியோர் தலைமையிலான குழு சந்தித்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications