500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் பீதி அடைய வேண்டாம் - பிரணாப் முகர்ஜி
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கேட்டு மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைக்கு குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் இதுகுறித்து பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் செல்லாது. இந்திய மக்கள் தங்களிடமுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வரும் டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
நவம்பர் 10ஆம் தேதி முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களில், மக்கள் தங்களிடமுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம் என்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் அறிவித்தார். இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. ஏடிஎம் மையங்களில் பலரும் குவிந்தனர்.
இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ' 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது தொடர்பாக பிரதமர் நேற்று என்னை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்தார். பிரதமரின் இந்த தைரியமான நடவடிக்கையின் காரணமாக கணக்கில் வராத கருப்பு பணம் வெளியே வரும் இதனை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து உள்ளதால், பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை.அரசு அறிவித்தபடி வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். மற்ற ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.