இனி நிறுவனம் மாறினால் பிஎப் கணக்கும் தானாக மாறும்.. விரைவில் அமல்
பணியாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறினால் பிஎப் கணக்கும் தானாக மாற்றப்படும். இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
டெல்லி: இப்போது, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் டக்டக்கென்று வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறுவது சகஜமாகிவிட்டது. இனி அப்படி மாறுவோரின் பிஎப் கணக்கும் தானாக மாறிவிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு வாழ்நாள் சிறுசேமிப்பு திட்டமான பிஎப் கணக்கு எனப்படும் சேமநல நிதி கணக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்தில் சேர்ந்தால், அவர்கள் உடனடியாக பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கை முடித்துக் கொண்டு பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.
ஒரு சிலர் மட்டுமே அந்தப் பணத்தை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கில் இணைத்துக் கொள்கிறார்கள். பழைய நிறுவனத்தில் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்தின் கணக்கோடு சேர்க்கும் பணி ஊழியர்களுக்கிடையே சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்நிலையில், ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்தில் சேரும் போது பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கு புதிய நிறுவனத்துடன் தானாக மாறும் வகையில் மத்திய அரசு வழி வகை செய்துள்ளது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.