திருப்பதியைப் போல சபரிமலை கோவிலை தினமும் திறக்க வேண்டும்: பினராயி கருத்துக்கு கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஆந்திராவின் திருப்பதியைப் போல கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலையும் தினமும் திறக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்க இன்னும் 2 மாதங்கள் உள்ளன. சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதனை முதல்வர் பினராயி விஜயன் சபரிமலை சன்னிதான கூட்ட அரங்கில் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக நேற்று காலை அவர் திருவனந்தபுரத்தில் இருந்து பம்பைக்கு சென்றார்.
இருமுடி கட்டி...
அங்கு இருமுடி கட்டி சன்னிதானம் செல்ல திட்டமிட்டார். கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த யாரும் இதுவரை இருமுடி கட்டி சன்னிதானம் சென்றதில்லை.
பம்பையில் மழை
அந்த பழக்கத்தை பினராயி விஜயன் மாற்ற முன் வந்தார். ஆனால் நேற்று அவர் பம்பை சென்றடைந்ததும் பலத்த மழை கொட்டியது. இதனால் அவர் திட்டமிட்டப்படி சன்னிதானம் செல்ல முடியவில்லை.
ஆலோசனை கூட்டம்
மழை காரணமாக பம்பையில் உள்ள கணபதி கோவிலில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பதி போல...
இக்கூட்டத்தில், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி கோவிலை போல இங்கும் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். கோவில் நடையை தினமும் திறக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
கடும் எதிர்ப்பு
ஆனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காதவர். அவரை தரிசிக்க வி.ஐ.பி. வரிசையும், அதற்காக கட்டணமும் வசூலிக்க முடியாது. ஐயப்பன் பிரம்மச்சாரி விரதம் கடை பிடிப்பவர். மாதந்தோறும் தியானத்தில் இருப்பவர். அவரது கோவிலை தினசரி திறப்பது என்பது ஆகம விதிக்கு முரணானது. எனவே கோவில் நடையை தினமும் திறப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றார். இதனைத் தொடர்ந்து பிரயார் கோபாலகிருஷ்ணனின் கருத்தை ஏற்பதாகவும், தன்னுடைய கருத்தை பரிசீலிக்க வேண்டுமென்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். விரைவில் இருமுடி கட்டி மீண்டும் சபரிமலை சன்னிதானம் வருவேன் என்றும் கூறினார்.