குஜராத்தில் 2ம் கட்டமாக தேர்தல் நடந்த தொகுதிகளில் பாஜக திடீரென முந்தியது எப்படி? பரபர காரணங்கள்
Recommended Video
டெல்லி: முதல்கட்ட தேர்தல்கள் நடைபெற்ற தொகுதிகளை விட 2வது கட்டமாக தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பாஜக அதிகம் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு என்ன காரணம் இருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் ஆரம்பத்தில் காங்கிரஸ் ஓரளவுக்கு முன்னிலை பெற்றது. இதனால் மொத்தத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுவதை போன்ற தோற்றம் ஏற்பட்டது.
2வது கட்ட தேர்தல்
ஆனால், பிறகு பாஜக பக்கம் காற்று வீச ஆரம்பித்தது. 2வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில்தான் பாஜகவுக்கு முன்னிலை அதிகமாக கிடைத்தது. இதற்கு பல காரணங்களை அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஸ்டைலை மாற்றிய மோடி
முதல்கட்ட தேர்தல் முடிந்த பிறகு பிரச்சார தொனியை வேறு மாதிரி மாற்றினார் மோடி. முதலில் பொதுவான பிரச்சினைகளை பற்றி பேசிய மோடி பிறகு பாஜகவின் வழக்கமான தாக்குதல்களை கையில் எடுத்தார். ராகுல் காந்தி வாரிசு அடிப்படையில் காங்கிரஸ் தலைவராவதாகவும், தான் ஏழை என்பதால் காங்கிரசுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
மணிசங்கர் ஐயர் தயவு
இந்த நேரத்தில்தான் காங்கிரசின் மணிசங்கர் ஐயர் வேறு, வாயை விட்டு மாட்டிக்கொண்டார். அவர் தரக்குறைவான வார்த்தையால் மோடியை விமர்சனம் செய்ததால், பார்த்தீர்களா, நான் கூறியது சரிதான் என்பதை காங்கிரஸ் நிரூபித்துவிட்டது என மோடி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானில் இருந்தபடி பாஜக அரசை கலைப்பது குறித்து பேசியதை மீண்டும் விதிக்கு கொண்டுவந்தார் மோடி.
பாகிஸ்தானையும் விடாத மோடி
பாகிஸ்தானும், காங்கிரசும் கை கோர்த்துக்கொண்டு குஜராத்தில் பாஜகவை தோற்கடிக்க சதி செய்வதாக குற்றம்சாட்டிய மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளுடன் டெல்லியில் ரகசிய கூட்டம் நடத்தியதாக குற்றம்சாட்டினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் முன்னாள் பிரதமர், முன்னாள் துணை குடியரசு தலைவர் உள்ளிட்டோர் பாக். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன் என்ற கேள்வி குஜராத் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவையெல்லாம் 2ம் கட்ட தேர்தலுக்கு முன்பாக நடந்த பரபரப்புகள்.
மண்ணின் மகன்
முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த இடங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பலை இருந்ததை கவனித்த பிரதமர் மோடி, மண்ணின் மகன் என்ற கோஷத்தை தீவிரப்படுத்தினார். மேடையில் கண்ணீர் சிந்தினார். கிட்டத்தட்ட மோடி மீது குஜராத் மக்களுக்கு அனுதாபம் வருவதை போல பிரசாரம் செய்தார். ஆனால் மறுபக்கம் காங்கிரஸ் வழக்கமான பிரசாரங்களை மட்டுமே முன்னெடுத்தது. இதன் பலன் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கிறது என்கிறார்கள்.