4 நாளில் 10 லட்சம் லைக்குகளை அள்ளியது பிரதமர் மோடியின் பேஸ்புக் பக்கம்....
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம், ஆரம்பிக்கப் பட்ட நான்கு நாட்களிலேயே சுமார் ஒரு மில்லியன் அதாகப்பட்டது 10 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.
கைக்குள் உலகத்தை அடக்கி விட்ட இந்த இணைய உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். அதன்படி, நவீன தொழில்நுட்பத்தை தனது பிரச்சாரத்தில் பயன் படுத்தி அமோக வெற்றியை சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.
பேஸ்புக்கில் பிரதமர் நரேந்திரமோடியின் அதிகாரபூர்வ பக்கம் தொடங்கப்பட்ட 4 நாட்களுக்குள் 10 லட்சம் பேர் அந்த பக்கத்திற்கு லைக் கொடுத்துள்ளது அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்...
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி மோடி பிரதமராகப் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி பிரதமர் அலுவகத்திற்கான பேஸ்புக் துவக்கப்பட்டது. இதுவரை, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கணக்கு துவக்கி உள்ளனர்.
ஆதரவு...
இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கான அதிகாரி அன்கிதாஸ், 'பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்துக்கு குடிமக்களின் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களை வியப்படைய வைத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
அதிக லைக் பெற்ற தலைவர்...
மேலும், ஏற்கனவே 10 லட்சம் ரசிகர்களின் லைக்கை பெற்று விட்டது மேலும் இது அதிகரித்து உலக அளவில் அதிக லைக் பெற்ற ஒரு அரசியல் தலைவரின் பக்கமாக மோடியின் முகநூல் பக்கம் இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஒபாமாவை பின்னுக்குத் தள்ளுவார்....
மிக விரைவில் ஒயிட் ஹவுசின் பேஸ்புக் விரும்பிகளின் எண்ணிக்கையை, இந்திய பிரதமர் அலுவலக பேஸ்புக் கணக்கு மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கிறோம்,' எனக் கூறியுள்ளார்.
மோடியின் டுவிட்டர் பக்கம்...
ஏற்கனவே, மோடிக்கு டுவிட்டர் பக்கம் உள்ளது. இதில், 45 லட்சம் பேர் தொடர்பில் உள்ளனர் என்பதும், 1.60 கோடி பார்வையாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.