விவசாயிகளை மறந்துவிட்டு ஜனநாயகம் பற்றி பேசுவதா?.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி : ஜனநாயகம் பற்றி பேசும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள், தொழிலாளர்களை முழுவதும் மறந்து விட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 முறை அவசரச் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆவது முறையாக அவசரச் சட்டம் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட்டது.
இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தெரிவித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெற்றி தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிலம் கையக மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கிவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன் நேற்று இளைஞர் காங்கிரஸார் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விவசாயிகள் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது...
ஜனநாயகம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், ஜனநாயகத்தை வழிநடத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள் குறித்து அவர் பேசுவதில்லை. அவர்களை மோடி மறந்துவிட்டார்.
நிலம் கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இது விவசாயிகளுக்கும் வெற்றிதான் என்றார் ராகுல் காந்தி.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.