காஷ்மீரில் பயங்கரம்- 300 பேர் கும்பலால் போலீஸ் அதிகாரி கல்லால் அடித்து கொலை
ஜம்மு காஷ்மீரில் 300 பேர் கொண்ட கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவர் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போலீஸ் அதிகாரி முகமது அயுப் பண்டித்தை 300 பேர் கொண்ட கும்பல் கொலைவெறியுடன் கல்லால் அடித்தே கொலை செய்த பயங்கர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகரில் இன்று அதிகாலை ஜாமியா மசூதியில் இருந்து வெளியே வருபவர்களை அயுப் பண்டித் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த சில இளைஞர்கள் அயுப் பண்டித் படம்பிடிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
அப்போது அயுப் பண்டித் தம்மை சுற்றி வளைத்தவர்களின் காலில் சுட்டு தப்ப முயற்சித்தார். இதனால் அங்கு திரண்ட 300 பேர் கொண்ட கும்பல் அயுப் பண்டித்தை சுற்றி வளைத்து தாக்கியது.
கல்லால் அடித்து கொலை
அவரது உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி கல்லால் அடித்தே கொன்றனர். சீருடையில் அயுப் பண்டித் இல்லாததால் அவர் யாரென தெரியவில்லை.
அடையாளம் தெரிந்தது
இத்தனைக்கும் மசூதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில்தான் அவரது வீடும் இருந்துள்ளது. பண்டித்தை காணாத நிலையில் அவர் குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டபோதுதான் அடையாளமே தெரியவந்தது.
போலீசார் கண்ணீர்
இந்த படுகொலை தொடர்பாக 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயுப் பண்டித்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த போலீசார் கண்ணீர்விட்டு கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.