இண்டர்நெட்டெல்லாம் பழசு.. புறாவுல பிரச்சாரம் செய்றதுதான் புதுசு!
லக்னொ: என்னதான் இண்டர்நெட், இ-மெயில் என்று மனிதன் முன்னேறினாலும், புறாவிடு தூது வழக்கத்தை இந்திய அரசியல்வாதிகள் காப்பாற்றிக்கொண்டுதான் வருகிறார்கள். ஆம்.. புறா விளம்பரம்தான் இப்போது உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் புது டிரெண்டு.
சுவரொட்டிகள், திண்ணை பிரச்சாரங்கள் என ஆரம்பித்த தேர்தல் பிரச்சார யுக்தி, இப்போது எஸ்.எம்.எஸ். பேஸ்புக், டுவிட்டர் என நவீனங்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. ஆனால் மன்னர் காலத்து புறா மூலம் தூது விடும் நடைமுறையை உ.பி அரசியல்வாதிகள் கையிலெடுத்துள்ளனர்.
உ.பி.யில் முகலாயர் காலத்து கட்டிடங்கள் அதிகம். புறாக்கள் வசிக்க அவை ஏற்ற வடிவமைப்புடன் உள்ளன. எனவே இங்கு புறாக்கள் எண்ணிக்கை அதிகம். புறாவை தொழில்முறையாக வளர்ப்போரும் உ.பியில் அதிகம்பேர் உள்ளனர்.
தேர்தலையொட்டி புறா வளர்ப்போருக்கு மவுசு கூடியுள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது சின்னங்களை புறாமீது வரைந்துவிட்டால் காசு கொடுப்பதாக புறா வளர்ப்பாளர்களை அணுகுகிறார்களாம். அலிஹஸ்னைன் என்ற புறா வளர்ப்பாளர் கூறுகையில், சமாஜ்வாதி கட்சி சார்பில் என்னிடம் 100 புறாக்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். புறாக்களின் உடலில் கட்சி சின்னத்தை வரையலாம், அல்லது மெல்லிய கயிற்றில் சின்னங்களை வரைந்து தொங்கவிடலாம். புறாக்கள் அங்குமிங்கும் சுற்றித்திரிபவை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சின்னங்களை பார்ப்பார்கள் என்றார்.
சில புறாக்கள் பல நூறு கிலோமீட்டர்கள் பறந்து சென்றாலும், உரிமையாளர் வீட்டுக்கு திரும்பிவந்துவிடுமாம். அதுபோன்ற புறாக்களுக்கு அவை பறக்கும் தூரத்துக்கு ஏற்பட கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இதனால், புறா விளம்பரங்களுக்கு உ.பியில் கடும் கிராக்கியாக உள்ளது. ஆனால் ஒன்று... வந்த புறாவை யாரும் வறுத்து சாப்பிடாமல் இருந்தால் சரிதான்.