ஓய்வுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி எங்க தங்கப்போறாருன்னு தெரியுமா?
ஓய்வுக்குப் பிறகு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டில் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: ஓய்வுக்குப் பிறகு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்ந்த வீட்டில் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் ரசனைக்கேற்ப அந்த வீட்டை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள 10ஆம் எண் இல்லத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்குப் பிறகு அந்த வீடு அப்துல்கலாம் நினைவாக அறிவுசார் மையமாக மாற்றப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கைகளை உதாசினப்படுத்திய மத்திய அரசு அந்த வீட்டை கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார்.
ஓய்வுக்காலத்தில் பிரணாப் முகர்ஜி வசிக்க 10 ஆம் எண் வீட்டை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த வீட்டில் வசித்து வரும் அமைச்சர் மகேஷ் சர்மா, அக்பர் சாலையில் உள்ள வேறு இல்லத்திற்கு மாற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜியின் ரசனைக்கு ஏற்றது போல 10-ம் எண் வீட்டில் தேவையான மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒருவர் இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்க முடியும். அவர்கள் தங்கும் இல்லத்திற்கான வாடகை, மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.