பாஜக அடி மடியில் கை வைத்த பிரசாந்த் கிஷோர்.. செம வியூகம்.. விஸ்வரூபம் எடுக்கும் மமதா பானர்ஜி!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவை முடக்கிப் போட்டு, திரிணாமுல் காங்கிரசை கிடுகிடுவென வளர வைப்பதில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தீவிரமாக இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் பாஜக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பிரசாந்த் கிஷோரை அணுகியது. ஐபேக் குழுவும் தொடர்ந்து வியூகங்களை வகுத்து வருகிறது.
மமதா கட்சியிலிருந்து சில முக்கிய பிரமுகர்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்தபோதிலும், அந்த கட்சி சிங்கிள் டிஜிட் இடங்களை தாண்ட முடியாது என பிரசாந்த் கிஷோர் ஓப்பனாக தெரிவித்து அனலை கிளப்பினார்.
பாஜக பலம்
மேற்கு வங்கத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு தீவிரமாக குளுகோஸ் ஏற்றி வருகிறார், வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். பாஜக தனது கால்தடத்தை பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வேகமாக விரிவுபடுத்தி வந்தது. மாநிலத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள பட்டியல் ஜாதி, பழங்குடியினர் வாக்குகளில் ஒரு பகுதி 2019ல் பாஜகவுக்கு சென்றது. 18 லோக்சபா தொகுதிகளை பாஜக வெல்ல இது ஒரு முக்கிய காரணம். இதுதான் பாஜகவின் பலமாக இருக்கிறது.
பாஜக அடிமடியில் கை வைக்கும் ஐபேக்
பழங்குடி மற்றும் பட்டியல் சாதித் தலைவர்களை மமதா அணுகுவதற்காக பிரசாந்த் நிறுவனம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. அப்படி ஒரு நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி பேசுகையில் "எஸ்சி / எஸ்டி மற்றும் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்கள் (பாஜக) உங்கள் வாக்குகளை பெற்று நிறைய வென்றிருக்கிறார்கள். உங்களால் அவர்கள் பல எம்.பி.க்களை வென்றுள்ளனர். ஆனால் அவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்து கொடுத்திருக்கிறார்களா? " என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. மக்களை சிந்திக்க தூண்டுவது. இதற்கான வியூகம் பிரசாந்த் கிஷோரால் அமைக்கப்பட்டது.
10 லட்சம் சாதி சான்று
மம்தா பானர்ஜியின் முதன்மைத் திட்டத்தில் ஒன்று "துவாரே சர்க்கார்". இதன்கீழ், ஒரு மாதத்திற்குள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதி சான்றிதழ்களை விநியோகித்துள்ளது. இதில் ஐபேக் முக்கிய பங்கு வகித்துள்ளது. பாஜக ஈர்த்த பட்டியல் சாதி வாக்குகளை மீண்டும் கொண்டுவருவதற்காக கட்சியின் எஸ்சி/எஸ்டி செல் தலைவர்களுடன் ஐபேக் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
பிரசாந்த் கிஷோர் அபாரம்
பட்டியல் சாதியினருக்கான திரிணாமுல் பிரிவின் தலைவர் டாக்டர் தபஸ் மண்டல் கூறுகையில் "ஒரு அரசியல் பிரதிநிதி மக்களிடம் செல்லும்போது, அவருக்கு முழு உண்மை தகவலும் கிடைக்காமல் போகலாம். ஆனால் ஒரு தனியார் நிறுவனம் மக்களிடம் செல்லும்போது, சார்பற்ற தகவல்களைப் பெற முடியும். இதில்தான் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் அரசுக்கு பாலமாக இருந்து வருகிறது" என்றார்.