கல்விக்காக அள்ளித்தந்த ஆசிம் பிரேம்ஜி... மூன்றாவது ஆண்டாக முதலிடம்!!
டெல்லி: விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆசிம் பிரேம்ஜி கல்விக்காக ரூ.27, 514 கோடி நன்கொடை அளித்து முதலிடத்தில் இருக்கிறார்.
2015 ஹுருன் இந்தியா பிலான்தபரி லிஸ்ட் என்ற அறிக்கை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த மூன்றாவது ஆண்டாக இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்திய வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் எந்த அளவுக்கு கடந்த ஆண்டில் (2014 நவம்பர் முதல் 2015 அக்டோபர் வரை) நன்கொடைகளை அளித்துள்ளனர் என்பது குறித்த ஆய்வுப் பட்டியல் இது. ஷாங்காயைச் சேர்ந்த ஹுருன் ஆய்வுக் கழகம் இந்த தகவல் கோப்பை சேகரித்து வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 10 கோடிக்கு மேல் தானம் கொடுத்தவர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதில் டாப் 10 இடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ளனர்.
2015ம் ஆண்டு நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆசிம் பிரேம்ஜி ரூ.27, 514 கோடி அளித்துள்ளார். 2014ம் ஆண்டு விப்ரோ அதிபர் ஆசிம் பிரேம்ஜி ரூ. 12,316 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கி முதலிடத்தில் இருந்தார். 2015ம் ஆண்டில் பிரேம்ஜியின் நன்கொடை இருமடங்காக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் நந்தன் நிலகேனி. அவர் அளித்துள்ள நன்கொடை ரூ.2404 கோடி. இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி இந்தப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார் அவர் அளித்துள்ள நன்கொடை ரூ.1322 கோடி. இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள நன்கொடையாளர்கள் மொத்தம் ரூ.34,077 கோடி அளித்துள்ளனர். இதில் 81 சதவிகிதம் அளவிற்கு நிதி அளித்துள்ளார் ஆசிம் பிரேம்ஜி.
பெரும்பாலும் கல்வித்துறைக்கே அதிக அளவில் உதவிகள் கிடைத்துள்ளன. நன்கொடை அளித்தவர்களில் 50 சதவிகிதம் பேர் கல்விக்காக அளித்துள்ளனர். சமூக வளர்ச்சிக்காக 25 சதவிகிதம் பேரும், 17 சதவிகிதம் மருத்துவம், ஆரோக்கியத்திற்காக அளித்துள்ளனர்.
எச்சிஎல் அதிபர் ஷிவ் நாடார் கடந்த 2013ம் ஆண்டு ரூ. 1864 கோடியை தானமாக அளித்திருந்தார். 2014ம் ஆண்டு சற்று குறைந்து ரூ. 1136 கோடியை நன்கொடையாக அளித்திருந்தார். இந்த ஆண்டும் ஷிவ் நாடார், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் நன்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.