ராகுலை நம்பி பலனில்லை.. காங்கிரசை காப்பாற்ற தீவிர அரசியலில் குதிக்கிறார் பிரியங்கா காந்தி?
லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பிரியங்கா காந்தி தீவிர அசியலில் களம் இறங்குவதாக அக்கட்சி வட்டார தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும், பாஜகவில் பிரதமர் நரேந்திர மோடி அளவுக்கு வலுவான தலைவராக இன்னும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸை வெற்றிபெற வைக்கும் அளவிற்கு அவரது வழிகாட்டுதல் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா மீது காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கவனம் திரும்பியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்த துணிச்சலும், வேகமும் பிரியங்காவிடம் இருப்பதாக அக்கட்சியின் தலைவர்கள் கருதுகிறார்கள்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்திக்கும், கட்சியின் துணைத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் பதவியை பிரியங்காவுக்கும் கொடுக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இந்த மாதத்தில் ஒரு மாநாட்டை நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அந்த மாநாட்டில், உத்திரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி தொகுதி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி என தமது குடும்பத்தினர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா இதுவரை பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலிலுக்காக, மாநிலம் முழுவதும் 150 பொதுக் கூட்டங்களில் அவர் பங்கேற்றுப் பிரசாரம் செய்ய இருப்பதாக அந்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சத்யதேவ் திரிபாதி தெரிவித்துளளார்.