ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்ற அதிநவீன ரோபோ- தமிழரின் சாதனை
பெங்களூர்: நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு வாழும் உதாரணமாக விளங்கும், மதுரையை சேர்ந்த ஆசிரியர் மணிகண்டனை நாடு முழுவதும் நன்றி பெருக்குடன் நினைவில் கொள்கிறது. ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துவிடும் குழந்தைகளுக்கு இவர் ஆபத்பாண்டவராக தெரிகிறார்.
ஹெலிகாப்டரில் அழைப்பு
கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் ஆழ்துளை கிணற்றில் 4வயது குழந்தை விழுந்தபோது, ஹெலிகாப்டர் வைத்து மணிகண்டனை சம்பவ இடத்துக்கு அழைத்துவந்தனர் என்றால் அவரது முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். நாடே உற்றுப்பார்க்கும் மணிகண்டனின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, நாலாட்டின்புதூர். தற்போது மதுரை டிவிஎஸ் சமுதாய தொழில்கல்வி கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கவலையால் வந்த எண்ணம்
இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில்; போர்வெல் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும், அதை காப்பாற்ற நடைபெற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவதையும், செய்திகளில் அடிக்கடி பார்த்தேன். எனவே குழந்தைகளை காப்பாற்ற ஏதாவது ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாதா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
காமிரா, மைக்
அந்த எண்ணத்தின் விளைவாக உருவானதுதான் குட்டி ரோபோ. முதலில் உருவாக்கிய ரோபோவில், கைகள் போன்ற பகுதியை உருவாக்கி மேலும் மெருகேற்றினேன். அதன்பிறகு அதாவது 2004-2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ரோபோவில் ஹைடெக் வசதிகளை ஏற்படுத்தினேன். ஆடியோ, வீடியோ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12 வோல்ட் பேட்டரியில் இந்த காமிரா, மைக் இயங்கிவருகின்றன.
நவீன வசதி
இரவிலும் படம் பிடிக்கும் வகையிலான கேமராவுடன், குட்டி டிவியும் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். கருவியுடன் இணைக்கப்பட்ட கயிறு, எத்தகைய ஆழத்திற்கும் செலுத்தும் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
தீயணைப்பு நிலையங்களில் வையுங்களேன்..
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு இதுபோன்ற ரோபோ கருவிகளை அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்பது மணிகண்டன் விருப்பமாக உள்ளது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்டுக்கொடுத்தது இவரது ரோபோதான்.
தாமதிக்காதீர்
அதே நேரம் திருவண்ணாமலை, பிஜாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இதற்கு காரணம், காலதாமதமாக மணிகண்டனுக்கு தகவல் அளிக்கப்படுவதுதான் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் விழுந்தவுடன் மணிகண்டனுக்கு தகவல் அளித்தால் குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.