பிரஸ்மீட்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற மராத்தி எழுத்தாளர் லக்ஷ்மண் மானே முகத்தில் கருப்புமை பூச்சு!
பீட்: மராத்தி எழுத்தாளரும் பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான லக்ஷ்மண் மானே முகத்தில் அவரது முன்னாள் ஆதரவாளர்களே செய்தியாளர்கள் முன்னிலையில் கருப்புமையை பூசி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடி இன மக்களுக்கான பாடுபட்டு வருபவர் லக்ஷ்மண். அவரது சேவைக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவர் நேற்று மகாராடிரா மாநிலம் பீட் என்ற இடத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அசாராம் கெய்க்வாட் என்பவர் தலைமையிலான குழுவினர் திடீரென மானே முகத்தில் கருப்புமையை பூசி அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் செய்தியாளர் சந்திப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அசாராம் கெய்க்வாட், 20 ஆண்டுகளாக மானேயின் ஆதரவாளராக இருந்தவன் நான். ஆனால் அவர் பழங்குடி இன வளர்ச்சி கவுன்சில் தலைவராக இருந்த போது கடனுதவி கேட்டதற்காக லஞ்சம் கேட்டார். அதற்கு பதிலடிதான் இது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம் போலீசில் புகார் தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் தங்களது கோபத்தைத் தணிக்க என் முகத்தில் கருப்பு மை பூசியிருக்கின்றனர் என்றும் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் லக்ஷ்மன் மானே மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்து பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications