கொல்கத்தா: சைக்கிள் ஓட்டினால் ரூ110 அபராதம்... அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வணிகர்கள்
கொல்கத்தா: வாகன நெரிசலைக் குறைப்பதற்காக கொல்கத்தா நகரின் சாலைகளில் சைக்கிளைப் பயன்படுத்த தடை விதித்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தடை உத்தரவுக்கு வணிகர்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சமீபத்தில், கொல்கத்தா நகரின் வாகன நெரிசலை குறைக்க திட்டமிட்டார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்படி, இயந்திரம் பொருத்தப்படாமல் மெதுவாக செல்லும் சைக்கிள், டிரை சைக்கிள் போன்ற வாகனங்கள் கொல்கத்தா நகரில் உள்ள சில குறிப்பிட்ட சாலைகளில் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.
ஆனால், தற்போது அந்த உத்தரவுக்கு எதிராக வணிகர்கள் மற்றும் சைக்கிள் பிரியர்கள் போர்க்கொடி உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.

சிறு வியாபாரிகள்....
கொல்கத்தாவில் சைக்கிள் ஓட்டத் தடை என்ற உத்தரவின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டவர், பால்காரர்கள், பேப்பர் போடுபவர்கள், கொரியர் டெலிவரி ஊழியர்கள் ஆகியோர் தான்.

சைக்கிள் மூலதனம்...
காரணம் இவர்கள் அனைவருமே சைக்கிளையும் ஒரு மூலதனமாகக் கருதி தொழில் புரிந்து வருபவர்கள். இந்தத் தடையால் தங்களது வணிகம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாக தற்போது இவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அதிக சாலைகளில் தடை...
முதலில், குறிப்பிட்ட அதிக நெரிசலான 38 சாலைகளில் மட்டுமே சைக்கிள்கள் நுழைய அனுமதி இல்லை என அறிவித்த போலீசார் தற்போது அந்த எண்ணிக்கையை 4 மடங்கு ஆக்கி விட்டனர் என இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எச்சரிக்கை.....
எனவே, மம்தா அரசின் இந்த முடிவை எதிர்த்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜொராசான்கோ பால் மார்கெட் வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சைக்கிள் பிரியர்கள்....
மேலும், அரசின் இந்தத் தடை உத்தரவிற்கு எதிராக கையெழுத்து வேட்டையைத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள். வியாபாரிகள் மட்டுமல்லாது சைக்கிள் பிரியர்களும் அரசின் இந்த கெடுபிடி உத்தரவிற்கு எதிராக கோர்ட் படியேற உத்தேசித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications