பி.டி.ஐ செய்தி நிறுவன டிவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள்.. 20 நிமிடங்களுக்கு பிறகு மீட்பு
டெல்லி: இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ‛பிரஸ் டிரஸ்ட் ஆப்' (பிடிஐ)இந்தியாவின் டிவிட்டர் பக்கத்தில் மர்ம நபர்கள் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பி.டி.ஐ. என்பது இந்தியாவின் முன்னணி செய்தி ஏஜென்சி. நாடு முழுக்கவும், உலகத்தின் முக்கிய நகரங்களிலும் நிருபர்களை பணியமர்த்தி, செய்திகளை பிற செய்தித்தாள்கள், ஊடகங்களுக்கு வழங்குவது இதன் பணி.
இந்த நிறுவனத்திற்கு பிரத்யேக டிவிட்டர் பக்கம் உள்ளது. முக்கிய செய்திகளை சிறு தகவல்களாக அதில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் பி.டி.ஐ நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‛பி.டி.ஐ. டிவிட்டர் பக்கத்தில் மாலை 7.30 முதல் 7.50 மணி வரை ஊடுருவல் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வெளியான தகவல்களுக்கு பி.டி.ஐ. பொறுப்பாகாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.