For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; அதிகாரிகள் மதிப்பதில்லை - முதல்வர் ரங்கசாமி வேதனை

By BBC News தமிழ்
|
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
BBC
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும் புதுவை முதல்வர் ரங்கசாமி தம்மை சந்திக்க வந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதையொட்டி சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத் திட்டங்களை வகுத்துவருவதாக கூறுகின்றனர்.

சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறப் பாடுபடவேண்டும் என்று வலியுறுத்தினர். மனு ஒன்றையும் அவர்கள் முதல்வரிடம் அளித்தனர்.

புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக விவாதிக்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் "என்னால் மக்களுக்காக செயல்பட முடியாத நிலை உள்ளது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இதுவரை எதற்கும் பயந்து இருக்கவில்லை," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் என்று சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் அது குறித்துப் பேசிய முதல்வர், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவேண்டும் என்பது குறித்து மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர்களும் பார்ப்பதாகக் கூறுகின்றார்கள். ஒரு கட்டத்தில் முடியுமா என்று கேட்டால், முடியாது என்று சொல்கிறார்கள். வாக்களித்த மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் செய்ய முடியாத சூழலில் இருக்கிறோம். வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால் தினசரி மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கருத்து வரும். அப்படி ஆகும்போது எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை என்பது வெளிப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாநில அந்தஸ்தை வலியுறுத்திய போது ரங்கசாமிக்கு அதிகாரம் போதவில்லை அதனால்தான் கேட்கிறார் என்று கேலி செய்தார்கள். ரங்கசாமி அதிகாரம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு துடிக்கிறார் என்று பேசினர்.

நான் எனக்காகத் துடிக்கவில்லை. மக்களுக்காகத் துடிக்கிறேன். ஆனால் புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவும், பிற்காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் இதனால் சிரமப்படக் கூடாது என்பதற்காகத் தான் இதைக் கேட்கிறேன். இதன் விளைவுகளை தற்போது நான் அனுபவித்து வருகிறேன். இதற்கு முன்பு இருந்த சூழ்நிலை வேறு மாதிரி இருந்தது. அதற்கேற்ப அப்போது செயல்பட முடிந்தது. ஆனால் கடந்த ஆட்சிக்குப் பிறகு நிலை மாறிவிட்டது. கடந்த ஆட்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சொல்லிய பிறகு இங்கு நமக்கு ஒன்றுமே இல்லை, மரியாதை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

கோ.சுகுமாறன்
BBC
கோ.சுகுமாறன்

தற்போது வெளிப்படையாகப் பேசுவதால் முன்பு பேசாமல் பயந்து இருந்தேன் என்பது கிடையாது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். அரசு ஊழியர்கள் சம்பந்தமாக ஒன்றைச் செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு வருகிறது. ஆனால் அதைச் செய்துவிடாமல் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளன என்று அதிகாரிகள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் சில விஷயங்களில் நீதிமன்ற உத்தரவு வரும்போது எங்களைச் சந்தித்து ஆலோசிக்காமல், அதுகுறித்து எதுவுமே தெரிவிக்காமல் ஒவ்வொரு துறைக்கும் உடனே உத்தரவு அறிக்கையை அதிகாரிகளே வெளியிடுகின்றனர்.

நாம் நினைப்பது போல புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும், மக்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் கேட்கிற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரியில் விடுதலை நாள் சம்பிரதாயத்துக்குத் தான் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையான விடுதலை நமக்குக் கிடைக்கவில்லை. மாநில அந்தஸ்து புதுச்சேரி அரசியலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்," என்று ரங்கசாமி கூறியதாக அந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் கூறுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை இல்லை என்ற சிக்கலையும், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி சமூக அமைப்புகள் ஒன்றாக இணைந்து மக்கள் மத்தியில் பிரசாரம், மாநாடு, போராட்டம் என்று படிப்படியாக நடத்தும் திட்டம் இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறினார் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கோ.சுகுமாறன்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுவையில் பொம்மை அரசு நடப்பதாகவும் ஆளுநரே அதிகாரம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார் இதையடுத்து முதல்வரே வெளிப்படையாக தாம் செயல்பட முடியாத நிலை இருப்பதை ஆளுநர், மத்திய அமைச்சர் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசினார். இதையடுத்து இப்போது சமூக அமைப்புகளிடம் முதல்வர் ரங்கசாமி இப்படிப் பேசியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Puducherry has yet to get real liberation - Officials are disrespecting me, says Rangasamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X