புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள்.. அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி
புல்வாமாவில் அவந்திபோராவில் இருந்து இன்று காலை தனது நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீநகர்: புல்வாமாவில் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் சமாதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதாரம் கேட்ட நிலையில், ராகுல் காந்தி அந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, பாரத் ஜோடோ நடைப்பயணம் பாதியில் நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தொடங்கியது.
போதை பொருள் ஒழிப்பு.. தமிழ்நாடு அரசு தீவிரம்.. பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
தீவிரவாதிகளுக்கு கற்பித்த பாடம்
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர் வந்த வேன் மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் வான் வழியே நுழைந்த இந்திய ராணுவம், அங்குள்ள தீவிரவாத முகாம்களைக் குண்டு வீசி அழித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர். எதிரி நாட்டுக்குள் சென்று சில குறிப்பிட்ட இலக்குகளை அழித்ததால் இது 'துல்லியத் தாக்குதல்' (surgical strike) என அழைக்கப்படுகிறது.
ஆதாரம் கேட்ட காங்., தலைவர்கள்
இந்த சூழலில், காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர், "பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்திவிட்டோம் என பாஜக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அதற்கான ஆதாரத்தை நாடாளுமன்றத்திலோ, மக்களிடமோ பாஜக காட்டவில்லை. இன்று வரை அந்த ஆதாரத்தை மத்திய அரசு காட்டத் தயங்குவது ஏன்?" என அவர் கேள்வியெழுப்பினார். இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் அல்வியும் துல்லியத் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
வெடித்த சர்ச்சையும்.. ராகுலின் முற்றுப்புள்ளியும்
காங்கிரஸ் தலைவர்களின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டதன் மூலம் இந்திய ராணுவத்தை காங்கிரஸ் இழிவுப்படுத்திவிட்டதாக பாஜக கடுமையாக குற்றம்சாட்டியது. இது, காங்கிரஸுக்கு மக்கள் மத்தியிலும் அவப்பெயரை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது. இதனை புரிந்துகொண்ட ராகுல் காந்தி, "துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தருமாறு திக்விஜய் சிங் கூறியது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்வதாகவும், ராணுவத்திடம் ஆதாரம் கேட்பது அற்பத்தனமான ஒன்று எனவும் கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ராகுல் அஞ்சலி
இந்நிலையில், புல்வாமாவில் அவந்திபோராவில் இருந்து இன்று காலை தனது நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், அவர்களின் சமாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய ராகுல் காந்தி, அங்கிருந்து மீண்டும் தனது நடைப்பயணத்தை தொடங்கினார். முன்னதாக, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக கூறி பாதியிலேயே நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.