தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி சென்ற ராகுல், பிரியங்கா..பெண்கள் கட்டிப்பிடித்து அழுகை!
லக்னொ: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதன்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல்காந்தி சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து எதிர்க்கட்சியாகும் அந்தஸ்தையும் இழந்தது. ஆனால் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியும், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தியும் வெற்றி பெற்றனர். இருப்பினும் ராகுல்காந்தியின் வெற்றி கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. கடந்த முறை 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல்காந்தி, இப்போது சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.
தொகுதி மக்களுக்காக ராகுல்காந்தி எதையுமே செய்யவில்லை என்பதுதான் இந்த இறங்குமுகத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி இன்று அமேதி தொகுதிக்கு சென்றார். சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் சென்றார். இரு தினங்களுக்கு முன்பு தொகுதிக்குட்பட்ட இடத்தில் நடந்த தீ விபத்தில் 67 வீடுகள் எரிந்து சாம்பலாகிய இடத்துக்கு அவர்கள் சென்றனர்.
அங்கு வசிக்கும் மக்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர். சில பெண்கள் பிரியங்கா காந்தியை கட்டிபிடித்து அழுது வீடிழந்த சோகத்தை கூறினர். இதைக்கேட்டுக் கொண்ட பிரியங்கா, வீடு இழந்தவர்கள் அனைவருக்கும் இந்திரா வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.