ப்பா..! 100-வது நாளை எட்டியது ராகுலின் 'பாரத் ஜோடா' யாத்திரை.. கொண்டாட்டத்தில் காங்., தொண்டர்கள்!
ஜெய்ப்பூர்: நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை இன்றுடன் 100-வது நாளை எட்டியுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நடைப்பயணம், 100-வது நாளில் ராஜஸ்தானை சென்று அடைந்துள்ளது.
பாரத் ஜோடா நடைப்பயணத்தின் 100-வது நாளையொட்டி ராஜஸ்தானில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
100வது நாளை நோக்கி ராகுல் காந்தியின் நடைபயணம்! கோலாகலமாக கொண்டாடுவோம் வாங்க! தமிழக காங்கிரஸ் அழைப்பு
கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை
மத்தியில் ஆட்சிப்புரியும் பாஜக அரசு, இந்தியர்களை மத ரீதியில் பிளவுப்படுத்துவதாக குற்றம்சாட்டி வந்த ராகுல் காந்தி, நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கியது தான் பாரத் ஜோடா யாத்திரை. கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் போது தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுடன் உரையாடிய படியும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தபடியும் சென்றார் ராகுல் காந்தி.
விமர்சனங்களுக்கு குறைவில்லாத யாத்திரை
ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் என 7 மாநிலங்களை கடந்து 8-வது மாநிலமாக ராஜஸ்தானில் இந்த யாத்திரை அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மாநிலங்களில் மொத்தம் 42 மாவட்டங்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தி பேசிய பேச்சுகள் பாஜகவினரை பெரிதும் கோப்படுத்தியது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் சாவர்க்கர் மீது ராகுல் காந்தி வைத்த விமர்சனம் நாடு முழுவதும் பாஜகவினரை கொந்தளிக்க வைத்தது.
இன்று 100-வது நாள்..
இந்நிலையில், சுமார் 2,600 கி.மீ. தூரத்தை கடந்த இந்த பாரத் ஜோடா யாத்திரை இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தானின் டெளஸா மாவட்டத்திற்கு தற்போது இந்த யாத்திரை வந்தடைந்துள்ளது. இங்கிருந்து ஜெய்ப்பூருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார்.
விமர்சனங்களை கண்டுகொள்ளாத ராகுல்
இதனிடையே, ராகுல் காந்தியின் இந்த ஜோடா யாத்திரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் போது ராகுல் எங்கேயோ நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்றும், அரசியலில் அவருக்கு ஆர்வமில்லை எனவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக, குஜராத் தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரம் கூட மேற்கொள்ள வரவில்லை என்றும் அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாமல் தனது நடைப்பயணத்தில் மட்டுமே கவனம் செலு்ததி வந்தார் ராகுல் காந்தி.