மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ராகுல் தான் பிரதமர்: ப.சிதம்பரம்
டெல்லி: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டால், ராகுல் பிரதமர் ஆவார் எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், காங்கிரஸின் பிரதம வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தி அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆக்க வேண்டும் என்ற அக்கட்சியின் தொண்டர்களின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நிராகரித்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் குழு தலைவர் என்ற புதிய பொறுப்பு ராகுலுக்கு வழங்கப் பட்டது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் இம்முறையும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டால் ராகுல் காந்தி நாட்டின் தலைமை பொறுப்பை பெறுவார் எனத் தெரிவித்துள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற கூட்டதில் கலந்து கொண்டார் ப. சிதம்பரம். அப்போது அவர் பேசியதாவது, " விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் எநத ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டால், ராகுல் காந்தி பிரதமராக ஆவார்" எனக் கூறியுள்ளார்.
மேலும் பாரதீய ஜனதாவின் பொருளாதார மாடல் பிற்போக்கு தனமானது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications