ஆன்லைனில் இனி நிமிடத்திற்கு 7200 டிக்கெட் பதிவு செய்யலாம் - சதானந்த கவுடா
டெல்லி: ரயில் டிக்கெட் எடுக்கும் முறை மேலும் எளிமையாக்கப்படும் என்று மத்திய ரயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும். ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையில் வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிமியம் ரயில்களுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் பெறமுடியும் என்று மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று தன்னுடைய முதல் பட்ஜெட்டினை லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது அவர்,
நிமிடத்திற்கு 7200 இ-டிக்கெட்
இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும். ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரே நேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்" என்றார்.
எஸ்.எம்.எஸ் சேவை
மேலும், "பயணிகள் போன், எஸ்.எம்.எஸ். மூலமாக உணவு தேவை குறித்து தகவல் அனுப்ப வழிவகை செய்யப்படும்.
உணவுத்தரம்
அதேபோல், பயணிகள் உணவுத்தரம் குறித்த பின்னூட்டத்தை ரயில்வே துறைக்கு அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்படும்" என்றார்.
மொபைல் டிக்கெட்
ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும் என்ற அவர், "டிக்கெட் முன்பதிவு முறைகள் மேம்படுத்தப்படும். மொபைல் மூலமாக, தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படும்" என்றார் ரயில்வே அமைச்சர்.
வை-பை வசதி
குறிப்பிட்ட ரயில்களின் ஏசி, முதல் வகுப்பு பெட்டிகளில் வை-பை வசதி அறிமுகம் -குறிப்பிட்ட ரயில்களிலும் இந்த வை-பை வசதி அறிமுகமாகும்
குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
பெண் காவலர்களுக்கு செல்போன்
ரயிலில் செல்லும் அனைத்து காவலர்களுக்கும் செல்போன்கள் வழங்கப்படும். பெண்கள் பெட்டிகளில் பெண் காவலர்கள் பயணிப்பர் என்று அறிவித்தார்.
பிரிமியம் ரயில்கள்
சென்னை-ஷாலிமர் இடையே ஏசிகளுடன் கூடிய பிரிமியம் ரயில் இயக்கப்படுகிறது. மதுரை-ஜெய்ப்பூர் இடையே ஏசிகளுடன் கூடிய பிரிமியம் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் புக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைமேடை டிக்கெட்
முன்பதிவு செய்யாத பயணச்சீட்டு, நடைமேடை சீட்டை இணையதளத்தில் பெற வசதி செய்யப்படும். தபால் நிலையம், செல்போன் மூலம் முன்பதிவு விரிவுபடுத்தப்படும்.
ஓய்வறைக்கு இணையதள பதிவு
அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் வசதி அமைக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் ஓய்வறை அமைக்க நடவடிக்கை. பயணிகள் ஓய்வறைக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ள வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.