பெங்களூரில் வெகு காலத்திற்கு பிறகு வெளுத்து வாங்கிய 'பகல்' மழை
பெங்களூர்: பெங்களூரில் வரலாறு காணாத அளவு பகல் நேர மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இன்று மதியம் தொடங்கிய மழை, மாலை வரை நீடித்தது. ஜெயநகர், வி.வி.புரம் உள்ளிட்ட மத்திய பெங்களூரில் மழை கொட்டியது. கடுமையான மழை காரணமாக மேற்கண்ட பகுதிகள், டெய்ரி சர்க்கிள், ஜேபி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பள்ளிகள், பாட நேரம் முடிந்த பிறகும் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் மழை குறைந்தபிறகே அவர்களை அனுப்பின.
வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாகத்தான் பள்ளியிலிருந்து கிளம்பும் என பெற்றோருக்கு கிறைஸ்ட் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகள் மெசேஜ் அனுப்பி வைத்தன. மழையால் மாலையில் டிராபிக் நெரிசலையும் நகரம் சந்தித்தது.
பகல் அரசில் இந்தளவு பெரிய அளவுக்கு சமீபகாலமாக மழை பெய்தது கிடையாது என்கிறார்கள் பெங்களூர்வாசிகள். மாலை அல்லது இரவு நேரத்தில் இப்படி பெய்து வந்தபோதிலும், பகல் நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது சமீபகாலத்தில் இதுதான் முதல் முறை.
ஆனால் கிழக்கு மற்றும் தெற்கு பெங்களூரின் பல பகுதிகளில் லேசான மழைதான் பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை இலாகா வட்டாரத் தகவல்படி ஜெயநகரில் இன்று பகலில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பெய்துள்ளது.