ராஜஸ்தான் பற்றி மற்றவங்க என்னய்யா நினைப்பாங்க..? 'தொந்தி' போலீசாருக்கு முதல்வர் வசுந்தரா கேள்வி
ஜெய்ப்பூர்: "ஏன்யா.. இப்படி தொப்பையை வளர்த்து வச்சிருந்தா நம்ம மாநிலத்துக்கு வரும் விஐபிகள் ராஜஸ்தானை பற்றி என்ன நினைப்பார்கள்" என்று கடுப்பாக கேட்டுள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராஜு சிந்தியா. முதல்வர் கோபத்துக்கு ஆளாக கூடாது என்ற நோக்கத்தில் ஜிம்மே கதியென்று கிடக்கின்றனராம் அந்த மாநில போலீசார்.

தொப்பை ஒரு தேசிய வியாதி
தமிழ்நாட்டு போலீசாருக்குதான் தொப்பை பெரிதாக உள்ளது என்று நினைத்துவிட வேண்டாம். இந்தியா முழுவதும் இதே நிலைதான் போலிருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

சாமி தரிசனம் செய்த முதல்வர்
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜு சிந்தியா மத்திய பிரதேசத்திலுள்ள புகழ் பெற்ற கோயில்களுக்கு சுவாமி தரிசனத்துக்காக சென்றிருந்தார். உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயில் உட்பட பல புண்ணிய தலங்களுக்கு அவர் சென்று சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை ராஜஸ்தான் திரும்பினார்.

முதல்வருக்கு வரவேற்பு
தலைநகர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் முதல்வருக்கு மரியாதை கொடுப்பதற்காக 10 பேர் கொண்ட போலீஸ் குழு நின்றிருந்தது. முதல்வர் வந்திறங்கியதும் சல்யூட் அடித்து அவரை வரவேற்று அழைத்துவந்தனர். அப்போது உடனிருந்த போலீஸ் ஐஜிபி கோவிந்த் குப்தாவை பார்த்து வசுந்தரராஜு சிந்தியா திட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஏங்க இப்படி இருக்காங்க..?
"ஏங்க நம்ம மாநில போலீசார் இப்படி தொப்பையும், தொந்தியுமாக இருக்கிறார்கள். எனது இடத்தில் மத்திய தலைவர்களோ அல்லது வேறு யாராவது விஐபிகளோ இருந்தால், நமது மாநிலத்தை பற்றி என்ன நினைப்பார்கள்" என்று மனதில் பட்டதை அப்படியே கேட்டுவிட்டு போய்விட்டாராம் வசுந்தரராஜு சிந்தியா.

யாருய்யா ஆள் பிடிச்சது.. கடுப்பான ஐஜிபி
முதல்வரிடம் திட்டு வாங்கிய கோபத்தில் ஐஜிபி கோவிந்த் குப்தா, தனக்கு கீழுள்ள அதிகாரிகளை காய்ச்சி எடுத்துவிட்டாராம். கூடுதல் எஸ்.பி மனிஷ் அகர்வால், சப்-இன்ஸ்பெக்டர் ஜகனாத் ஆகியோர்தான், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் போலீசார் யார், யார் என தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஐஜிபி கோவிந்த் குப்தா.

உடற்பயிற்சி கட்டாயம்
இதுகுறித்து கூடுதல் எஸ்.பி. அகர்வால் கூறுகையில், "திங்கள் முதல் வெள்ளிவரை நடைபெறும் பி.டி. பயிற்சிக்கு அனைத்து போலீசாரும் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 25 சதவீத உடற்பயிற்சிகளையாவது கட்டாயமாக செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் அனைத்து அதிகாரிகளும் கட்டாயமாக ஜாகிங் செல்ல வேண்டும் என்பதும் கட்டாயம்" என்றார்.

பணி சுமையால் சிக்கல்
ராஜஸ்தான் போலீஸ் அகாடமி இயக்குநர் பி.எல்.சோனி கூறுகையில், "போலீசாருக்கு இருக்கும் பணிச்சுமை காரணமாக உடற்பயிற்சிக்கு அனைவரும் வருவதில்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications