கூலி கேட்டது தப்பா? ராஜஸ்தான் தலித் வாலிபருக்கு அடி-உதை.. ‛அதை’ குடிக்க வைத்து கொடுமை.. ஷாக்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கூலி கேட்ட தலித் வாலிபரை அடித்து உதைத்து, யூரினை குடிக்க வைத்து செருப்பு மாலை அணிவித்து 5 மணிநேரம் சித்ரவதை செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் சாதிய பாகுபாட்டை களைந்து அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் கூட சில நபர்கள் சாதிய பாகுபாட்டில் கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இத்தகைய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட இந்தியாவில் ஆங்காங்கே சாதிய பாகுபாட்டால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது ராஜஸ்தானில் மிகவும் கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

எலெக்ட்ரிஷியன் பணி
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தை சேர்ந்தவர் பரத் குமார் (வயது 35). இவர் எலெக்ட்ரிஷியனாக பணி செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் மின்இணைப்பு தொடர்பான பல்வேறு பணிகளை செய்தார். இந்த பணிக்கு மொத்தம் ரூ.21 ஆயிரம் பில் வந்தது. இதையடுத்து அவர் உரிமையாளரிடம் ரூ.21 ஆயிரம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் வழங்கியதோடு மீதமுள்ள பணத்தை தாமதமாக தருவதாக தெரிவித்தார்.

தாக்குதல்
இதையடுத்து பரத் குமார் சம்பவத்தன்று தனக்கு வர வேண்டிய பணத்தை அங்குள்ள ஓட்டலில் வைத்து கேட்டார். அப்போது இரவில் வரும்படி அந்த நபர் கூறினார். இரவில் பரத் குமார் தனது பணத்தை வாங்க சென்றார். இந்த வேளையில் சிலர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். ‛‛விட்டுவிடுங்கள்'' என பரத் குமார் காலை பிடித்து கெஞ்சினாலும் கூட அவர்கள் மனம் இறங்கி வரவில்லை. பரத் குமாரை காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கினர்.

கொடுமையின் உச்சம்
மேலும் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து யூரினை குடிக்க வைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவ்வாறாக சுமார் 5 மணிநேரம் பரத்குமாரை அந்த கும்பல் கொடுமைப்படுத்தியது. மேலும் இந்த துன்புறுத்தலை ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

கைது செய்த போலீசார்
தவறு செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலைதளங்களில் ஒவ்வொருவரும் குரல் கொடுக்க துவங்கினர். இதற்கிடையே தான் பாதிக்கப்பட்ட பரத் குமாரும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். இருப்பினும் அந்த நபர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications