200 சட்டசபை தொகுதிகளில் தனித்து போட்டி.. ராஜஸ்தானில் மாயாவதி கட்சி அதிரடி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 200 தொகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு டிசம்பர் 7-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பாஜகவின் வசுந்தரா ராஜே மீது அந்த மாநில மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றன. இந்நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இருக்கிறது.
முழு வீச்சில்
ராஜஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலில் 200 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணை தலைவர் துங்காராம் கூறுகையில் ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறோம்.
அதிக இடங்களில்
வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். மக்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். பாஜக மீது மக்கள் கோபத்திலும் காங்கிரஸ் மீது நம்பிக்கையற்றும் உள்ளனர். எனவே 2018-இல் நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார்.
6 எம்எல்ஏக்கள்
கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலில் 3.37 சதவீத வாக்குகளை பெற்று 3 இடங்களில் மட்டுமே பிஎஸ்பி வெற்றி பெற்றது. அதுபோல் 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் 7.60 சதவீத வாக்குகளை பெற்று 6 எம்எல்ஏக்களை பெற்றது.
காங்கிரஸுக்கான வாக்குகள்
மாயாவதியின் கட்சிக்கு பாரத்பூர், டோல்பூர், காராளி, சவைமதோபூர், ஆல்வார், ஹனுமன்கார், ஸ்ரீகங்காநகர், பீகானெர் ஆகிய தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளது. 200 தொகுதிகளில் 34 தொகுதிகள் எஸ்சி தொகுதிகள் 25 தொகுதிகள் எஸ்டி தொகுதிகளாகும். எனவே மாயாவதி எஸ்சி வாக்குகளை குறிவைத்து தனித்து போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸுக்கான வாக்குகள் சிதறும் சூழல் உள்ளது.