வெளிநாடுகளுக்கு பாதுகாப்பு படையினரை ராகுல் அழைத்து செல்லாது ஏன்? ராஜ்நாத்சிங் சுளீர்
வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு படையினரை ராகுல் காந்தி ஏன் அழைத்து செல்வதில்லை என கேள்வி எழுப்பியிருக்கிறார் ராஜ்நாத்சிங்.
டெல்லி: வெளிநாடுகளுக்கு செல்லும் போது தமது பாதுகாப்பு படையினரை ராகுல் ஏன் அழைத்துச் செல்வதில்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குஜராத் வெள்ளம் பாதித்த பாகுதிகளை பார்வையிட சென்ற ராகுல் காந்தி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்திக்கு பாதுகாப்பு தர மத்திய அரசும் குஜராத் அரசும் தவறிவிட்டன.
தீவிரவாதிகளா பாஜகவினர்?
ஜம்மு காஷ்மீரில் கல் எறிகிறவர்களை தீவிரவாதிகள் என்கிறோம். அப்படியானால் குஜராத்தில் கல் எறிந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? குஜராத் பாஜகவினரும் தீவிரவாதிகளாக முயற்சிக்கிறார்களா? என காட்டமாக பேசினார்.
ஏன் அழைத்து செல்லவில்லை?
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கடந்த 2 ஆண்டுகளில் ராகுல் காந்தி 72 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தார். 6 வெளிநாடு சுற்று பயணங்களை அவர் மேற்கொண்டிருந்தார். அப்போது தமக்கு சிறப்பு கமாண்டோ படை வீரர்களை ராகுல் காந்தி அழைத்துச் செல்லவில்லை.
எதை மறைக்க முயற்சி?
வெளிநாட்டு பயணங்களில் எதை மறைப்பதற்காக கமாண்டோ படையினரை ராகுல் காந்தி அழைத்துச் செல்வதில்லை? குஜராத்தில் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றை அவர்தான் நிராகரித்தார் என்றார்.
அமளி- ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.