ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜேட்லிக்கு மோடி "ஷொட்டு"... 15 பேருக்கு "கொட்டு"!
டெல்லி: சீனியர் அமைச்சர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாராம். இவர்கள் கடந்த 100 நாள் மோடி ஆட்சியில் தங்களது துறை செய்த செயல்கள் குறித்த ரிப்போர்ட் கார்டை உரிய நேரத்தில் சமர்ப்பித்து மோடியிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளனர்.
அதேசமயம், மேனகா காந்தி உள்பட 15 அமைச்சர்கள் இன்னும் ரிப்போர்ட் கார்டே தராமல் உள்ளனராம். இவர்கள் மீது அதிருப்தியுடன் இருக்கிறாராம் மோடி. விரைவில் உங்களது ரிப்போர்ட் கார்ட் வந்தாக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளாராம் மோடி.
மோடி அரசு பதவிக்கு வந்து 100 நாட்கள் கழிந்து விட்ட நிலையில் 100 நாட்களில் தங்களது துறைகள் செய்த சாதனைகள் என்ன என்பதை ஒரு அறிக்கையாக தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டிருந்தார்.
நல்ல பிள்ளைகள் சில
இதில் சில அமைச்சர்கள் நல்ல பிள்ளைகளாக குறித்த காலத்தில் அறிக்கையை சமர்ப்பித்து விட்டனர்.
சுஷ்மா, ராஜ்நாத், ஜேட்லிக்குப் பாராட்டு
இவர்களில் முப்பெரும் அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோருக்கு எதிர்பார்த்தது போலவே பாராட்டுகள் கிடைத்ததாம். உங்களது பணிகள் திருப்திகரமாக உள்ளதாக மோடி பாராட்டினாராம்.
மேனகா - நஜ்மா ஹெப்துல்லா
அதேசமயம் நஜ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, ஹர்ஷவர்த்தன் உள்பட 15 அமைச்சர்கள் இன்னும் அறிக்கையே தாக்கல் செய்யவில்லையாம். இதனால் மோடி இவர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனராம்.
என்ன பண்றீங்க...
அவர்களைத் தனித் தனியாக கூப்பிட்டு என்ன பண்றீங்க என்று கேட்ட மோடி, ரிப்போர்ட் வராவிட்டால் அமைச்சர் பதவியை விட்டு விட்டு கட்சிப் பணிக்குப் போக வேண்டியதுதான் என்று கூறி விட்டாராம்.