பயமுறுத்தும் மும்பை... 3 மாதத்தில் 165% அதிகரித்த பெண் கடத்தல், பலாத்காரம்!
மும்பை: இந்த ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மும்பையில் பெண்கள் கடத்தப்படுவது 165 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்கள் கடத்தப்படுவது, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது குறித்த கணக்கு விவரங்களை அளிக்குமாறு சேத்தன் கோத்தாரி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
அந்த பதிலில் அளிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு,
கடத்தல்
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் 76 பெண்கள் மும்பையில் கடத்தப்பட்டனர். இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் 202 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்கள் கடத்தப்படுவது 165 சதவீதம் அதிகரித்துள்ளது.
பலாத்காரம்
கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் மும்பையில் 138 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் வரை 172 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோத்தாரிக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் அதிகரிப்பு
மும்பை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏராளமானோர் கடத்தல் மற்றும் பலாத்காரம் பற்றி பயமில்லாமல் போலீசில் புகார் அளிக்கின்றனர். அதனால் தான் பலாத்காரம் மற்றும் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று போலீசாரும், நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள்
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்வது பெரும்பாலும் உறவினர்கள், குடும்பத்திற்கு தெரிந்தவர்களாக உள்ளனர். மேலும் சிறுமிகள் கடத்தப்படுவதில் அவர்களை ஏமாற்றி வீட்டை விட்டு அழைத்துக் கொண்டு ஓடுவது தான் அதிகமாக உள்ளது.
பாதுகாப்பு இல்லை
மும்பையில் உள்ள 272 ஒதுக்குப்புறமான இடங்கள் பகல் நேரத்தில் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.