ரத சப்தமி: திருமலையில் 7 வாகனங்களில் எழுந்தருளிய ஏழுமலையான்
திருமலை: ரத சப்தமி விழாவை முன்னிட்டு திருமலையில் அதிகாலை முதல் இரவு, 10 மணி வரை மலையப்ப சாமி, ஏழு வாகன சேவையில், திருமலை மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல மாநிலங்களிலும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்
ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே! பிரத்யட்ச தெய்வமாகப் போற்றப்படும் சூரியனின் உத்திராயணப் புண்யகாலம், தை முதல் நாள் தொடங்குவதாகச் சொன்னாலும், உண்மையில் அந்தப் பயணம் தைமாதம் சப்தமி நாளில்தான் ஆரம்பமாகிறது. அதனால், ரத சப்தமி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகிறது. இந்த தினமே ஆதித்யனின் அவதார தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் கூறுவர்.
ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாசி மாதம் வளர்பிறை 7ம் நாள் சப்தமியன்று சூரிய ஜெயந்தி (ரத சப்தமி) கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் 9 நாள் பிரம்மோற்சவ நாட்களில் வரும் வாகனங்கள் காலை முதல் இரவு வரை ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
7 வாகனங்களில் உலா
ஞாயிறன்று காலை முதல் உற்சவமாக சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி தங்க வைர கீரிடம் அணிந்து சூரியனுக்கு உகந்த நிறமான சிகப்பு மாலையுடன் எழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
வடமேற்கு மாடவீதியில் சூரிய உதயத்திற்காக காத்திருந்து காலை 6.50 மணிக்கு சூரிய கதிர்கள் சுவாமியின் மீது விழுந்த பிறகு மலையப்ப சுவாமிக்கு சிறப்பு நெய்வேத்தியம் சமர்பிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. நான்கு மாடவீதிகளிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா' என பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோலாகல கொண்டாட்டம்
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது 9 நாட்கள் நடைபெறும் வாகன சேவையை காண முடியாத பக்தர்கள் ரதசப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி வீதிஉலாவை காண தமிழகம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சகணக்காண பக்தர்கள் திரண்டனர்.
ராஜகோபால சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம்
இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் 2 ஆவது ஆண்டாக ரத சப்தமி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், திருவாராதனம் நடைபெற்றது. அதன்பின்பு முதன்முதலில் சூர்யபிரபை வாகனத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு வாகனங்களில் உலா வந்த சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.