ரூ.85,000 கோடியை சுருட்டிய 57 பெரும் முதலைகள் பெயரை ஏன் வெளியிடக் கூடாது? சுப்ரீம்கோர்ட்
டெல்லி: இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு திரும்பி செலுத்தாத பெரும் பணக்காரர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பான பொதுநல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரசுந், நீதிபதி எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டபடி 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் 57 பேர் கொண்ட பட்டியலை ரிசர்வ் வங்கி அளித்தது. இதன்மூலம், 85 ஆயிரம் கோடி ரூபாய் வரை திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது என்றும் இவர்கள் அனைவரும் வேண்டுமென்றே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர்கள் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் கூறியது.
இதனையடுத்து, பணத்தை கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாவர்களின் பெயர்களை ஏன் வெளியிட வில்லை என்று சுப்ரீம் கோர்ட் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியது. பணத்தை கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்கள் ஏன் பொதுமக்களுக்கு தெரியக் கூடாது? ஏன் அந்தப் பெயர்களை மறைத்து வைக்க வேண்டும்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதற்கு வங்கியின் பெயர்கள் கெட்டுவிடும் என்பதால் வெளியிட வில்லை என்று ரிசர்வ் வங்கி பதில் அளித்தது.
ரிசர்வ் வங்கி நாட்டுக்காக செயல்பட வேண்டுமே தவிர வங்கிகளுக்காக அல்ல என்றும் நீதிபதிகள் கடுமையாக கூறினார். கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியவர்கள் கம்பனி நட்டம் அடைந்துவிட்டதாகக் கூறி தப்பி விடுகின்றனர். ஆனால் விவசாயிகள் 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என கடனைப் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர் என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications