பாலியல் புகார் சொன்ன பத்திரிகையாளர் டெஹல்காவில் இருந்து ராஜினாமா செய்தது ஏன்?
டெல்லி: டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலை காப்பாற்றும் வகையிலேயே அந்நிறுவனம் செயல்பட்டதாலேயே புகார் சொன்ன பத்திரிகையாளர் ராஜினாமா செய்திருக்கிறார்.
டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் சக பெண் பத்திரிகையாளருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத் தொடந்து நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரிக்கு மின் அஞ்சல் மூலம் அப்பெண் பத்திரிகையாளர் புகார் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நிறுவன ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென தருண் தேஜ்பால் தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அத்துடன் 6 மாத காலம் பதவியில் இருந்து விலகுவதாகவும் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சோமா செளத்ரியும் தேஜ்பாலின் மன்னிப்பு மற்றும் விலகலை பாதிக்கப்பட்ட பெண் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றே ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்தார்.
ஆனால் தேஜ்பாலை காப்பாற்றும் வகையிலேயே சோமா செளத்ரி இப்படி பேட்டி கொடுத்தார் என்றும் இதனால் அந்நிறுவனத்திடம் இருந்து நீதி கிடைக்காது என்று கருதி தாம் ராஜினாமா செய்வதாக அப்பெண் பத்திரிகையாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சோமா செளத்ரிக்கு நீண்ட ராஜினாமா கடிதம் ஒன்றை அப்பெண் பத்திரிகையாளர் அனுப்பி வைத்திருக்கிறார். சோமா செளத்ரியின் செயல்பாடுகள் முழுவதுமே நிறுவனத்தின் பெயரை காப்பாற்றும் வகையிலானதாக இருக்கிறதே தவிர பாதிக்கப்பட்ட தமக்கு நீதி கிடைப்பதற்கானதாக இல்லை என்றும் எத்தனையோ பாலியல் பலாத்கார கட்டுரைகளை எழுதிய தாமே இப்போது நீதி கேட்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் விவரித்திருக்கிறார்.
இந்த சூழலில் டெஹல்கா நிறுவனத்தில் தொடர்ந்தும் பணிபுரிய முடியாது என்பதாலேயே தாம் ராஜினாமா செய்கிறேன் என்றும் அப்பெண் பத்திரிகையாளர் அதில் கூறியுள்ளார்.